கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் அஹமட்டின் வாகனம் கல்முனையை நோக்கி எத்தனை தடவைகள் வந்துள்ளது என்ற தலைப்பிட்ட கட்டுரையொன்றை எமக்கு காணக்கிடைத்தது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் சேவைகள் இன்று கிழக்கின் பல பகுதிகளிலும் வியாபித்துள்ளது என்பது நிதர்சனம்.
அவர் பதவியேற்று இன்னும் இரண்டு ஆண்டுகளே பூர்த்தியடைந்துள்ள நிலையில் குறித்த இரண்டு ஆண்டுகளிலேயே 30 அல்லது 40 வருட அரசியல் அனுபவத்தைக் கொண்டவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு தமது அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகின்றார்.
இந்த நிலையில் கிழக்கு முதலமைச்சரின் வாகனம் கல்முனையை நோக்கி எத்தனை தடவைகள் வந்துள்ளது என்ற கட்டுரையை சிறுபிள்ளைத் தனமாக நிறுவ முற்பட்டுள்ள இப்ராஹிம் மன்சூர் என்பவரது வாதம் சிரிப்பைத் தான் ஏற்படுத்துகின்றது, அவருடைய முதலாவது வாதம் கல்முனை மக்கள் வாக்களித்துத்தான் ஹாபிஸ் நசீர் அஹமட்டை கிழக்கிற்கு முதலமைச்சராக்கினர் என்று குறிப்பிட்டிருந்தாார்.
நாம் உதாரணத்துக்கு இலங்கை நாட்டின் ஜனாதிபதியை எடுத்துக் கொள்வோம், வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்களின் வாக்குகளால் இலங்கையின் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுகின்றார், இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதியைப் பார்த்து கல்முனை மக்கள் கேட்க முடியும். நீங்கள் உலக நாடுகளுக்கு எல்லாம் செல்கின்றீர்கள் எங்கள் ஊருக்கு எத்தனை தடவை வந்தீர்கள் என்று கேட்க முடியுமா..?
யாழ்ப்பாணம் வரணியிலுள்ள ஒருவர் கேட்க முடியும் நாங்களும் உங்களுக்கு வாக்களித்தோம் எங்கள் ஊருக்கு எத்தனை தடவைகள் வந்தீர்கள் என்று கேட்க முடியுமா, அவ்வாறானால் இலங்கையில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் உள்ளவர்களும் ஜனாதிபதியிடம் எங்கள் ஊருக்கு வர வேண்டும் என்று கேட்டால் அவரின் ,அந்தப் பயணத்திலேயே அவரின் பதவிக்காலம் முடிந்து விடும்.
இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அவருடைய பிரதான பணி அமைச்சரவையின் தலைவர் என்ற வகையில் இந்த நாட்டின் அபிவருத்திக் கொள்கையினை வகுத்து அதற்கான நிதியினை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை மேற்கொண்டு அவற்றை அமைச்சரவை மற்றும் பாராளுமன்றம் மற்றும் அதிகாரிகள் ஊடாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகும்.
அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஊடாக ஒவ்வொரு பகுதிகளிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும்,இது தான் பொதுவான நடைமுறை, இதே நடைமுறையை மாகாண சபையுடன் பொருத்திப் பாருங்கள் எல்லா விடயங்களுக்கும் தௌிவு கிடைக்கும், இந்த அபிவிருத்திக்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி உலக நாடுகளின் தலைவர்களை சந்திப்பார்,உலக வங்கியின் பிரதிநிதிகளை சந்திப்பார் இவ்வாாறு பல நடவடிக்கைகளை இதன் போது அவர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதே போன்று தான் மாகாண சபைகளுக்கான நிதியொதுக்கீடுகள் வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட போதும் அந்த நிதிகள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டொன்று பரவலாக உள்ளது, அத்துடன் பல அமைச்சுக்களுக்கூடாக மாகாணத்துக்கான நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. நம் நாட்டின் துரதிர்ஷ்டமோ என்னவோ நம் நாட்டின் அத்தனை அமைச்சுக்களும் நிர்வாக மையங்களும் கொழும்பிலேயே உள்ளன.
சாதாரணமாக ஏனைய முதலமைச்சர்கள் கடிதங்களை அனுப்பி அனுப்பி வருட இறுதியில் தான் நிதிகளைப் பெற்று அபிவிருத்திகளை முன்னெடுப்பர், ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சற்று வித்தியாசமாக குறித்த கோரிக்கை கடிதங்களை அனுப்பி விட்டு அவரே அமைச்சுக்களுக்கு நேரில் சென்று விடயம் சார் அமைச்சர்களை சந்தித்து நிதியைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பார், இதற்கு சிறந்த உதாரணம் பட்டதாரிகள் பிரச்சினை ஏற்பட்ட போது ஏனைய எந்த மாகாண முதலமைச்சருக்கும் முன்னுதாரணமாக பிரதமரை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பல தடவை நேரில் எடுத்துரைத்து தீர்வு பெற்றுக் கொடுத்தார்.
இங்கு கல்முனைப் பட்டதாரிகளும் உள்ளனர் தானே அப்போது அவர்களுக்கும் தொழில் வாய்யப்புக்கள் கிடைக்கப் பெறுமல்லவா, ஆகவே இதனால் தான் இன்று சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட மாகாண சபையுடன் போட்டி போட முடியாமல் மாகாண சபையை கலைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றனர், கிழக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையின் கீழ் இயங்கும் கிழக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மாகாண சபையின் சுகாதார அமைச்சர் நசீர் , மாகாண சபை உறுப்பினர்களான தவம்,ஜவாத் மற்றும் மாஹிர் ஆகியோர் இருக்கின்றனர் எனவே இவர்களுடாக மாகாண சபை ரீதியாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
நீங்கள் ஒரு நாளைக்கு மாகாண சபைக்கு சென்றீர்களானால் உங்களுக்கு முழுமையான தரவுகளை பெற்றுக் கொள்ள முடியும், அது மாத்திரமன்றி ஶ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் கோட்டையான கல்முனையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினாலும் விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களினாலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் உங்களுக்கு மஞ்சள் கவர் வழங்குபவரால் தான் எதனையும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை, ஆகவே மத்தியிலும் மாகாணத்திலும் உள்ள அதிகாரங்கள் மூலம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது என்பதை நீருபிக்க போதிய தரவுகள் எம்மிடம் உள்ளன. அதற்காகவே எமது அபிவிருத்திப் பணிகளை தொகுத்து சாட்சியம் என்ற புத்தகத்தை எமது கட்சி வௌியிட்டு வருகின்றது.
ஆகவே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்தியிலும் மாகாணத்திலும் சிறந்த வலுவான நிலையைக் கொண்டுள்ளதால் மாதாந்தம் ஒவ்வொரு பகுதிகளிலும் அபிவிருத்திப் பெருவிழாக்களை முன்னெடுத்து வருகின்றது என்பதை மக்களும் அறிவார்கள், உலகம் போற்றும் எழுத்தாளர்கள் போல் கூலிக்கு எழுத முன்னர் விடயதானமறிந்து எழுதுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.
எஸ்,ஐ.எம் நிப்ராஸ்,
வாழைச்சேனை,
கல்குடா ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்.