கதிராமங்கலம் கிராம மக்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேரணி சென்றார். பின்னர் அவருக்காக அமைக்கப்பட்ட மேடையில் பேசும்போது திடீரென மயங்கி விழுந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராகவும், கடந்த 30ம் தேதி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் 10-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில் இன்று, கதிராமங்கலம் மக்களைச் சந்திக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கதிராமங்கலம் வந்தடைந்தனர்.
கிராம மக்களைச் சந்தித்து நேரில் ஆதரவு தெரிவித்த அவர்கள், பேரணியாக நடந்து சென்றனர்.
பின்னர் அரசியல் கட்சி தலைவர்களுக்காக பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டது. கதிராமங்கல மக்களுக்கு ஆதரவாக முத்தரசன் உரையாற்றினார்.
அவரை தொடர்ந்து வைகோ பேச வந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். சில நொடிகளிலேயே சுதாரித்து, மீண்டும் எழுந்து பேசத் தொடங்கினார். பேசி முடிப்பதற்கு முன்னாள் மீண்டும் தள்ளாடினார்.
அவரின் தொண்டர்கள் அவரை தாங்கிப்பிடித்து அமர வைத்தனர். பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் வைகோவிடம் உடல்நிலை குறித்து கேட்டப்போது, ‘எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதனால்தான் மயங்கி விழுந்தேன் என்றார்.