ஆண்டின் அதிகூடிய நோயாளர்கள் எண்ணிக்கை பதிவாகிய ஆண்டாக இந்த ஆண்டு கருதப்படுகின்றது. இந்நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த சகல விதங்களிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பொதுமக்கள் தமது சூழலை சுத்தமாக வைத்திருக்க தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வருகின்றது.
நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்துவரும் நிலையில் சுகாதார அமைச்சு மற்றும் அரச நிறுவனங்களை இணைத்துக்கொண்டு அரசாங்கம் விரைவான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக நீர்கொழும்பு, தலங்கம, வேதர, பாணந்துறை மற்றும் ஐ.டி.எச். ஆகிய வைத்தியசாலைகளில் டெங்கு சிசிச்சைக்கான விசேட பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதேபோல் டெங்கு பரவல் காரணமாக நாளாந்தம் தேசிய வைத்தியசாலையை நாடும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதன் காரணமாக டெங்கு சிகிச்சைக்கான விசேட பிரிவுகளை ஸ்தாபிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலவும் பகுதிகளில் நுளம்புப் பெருக்கம் தொடர்பிலான அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அந்தவகையில் நுளம்பு குடம்பிகள் தொடர்பிலான ஆராய்ச்சி உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பாடசாலைகள், வேலைத்தலங்கள், மதஸ்தலங்கள் மற்றும் ஏனைய நிறுவன வளாகங்களில் 60 வீதமான நுளம்பு பெருக்கம் பதிவாகியுள்ளது. எஞ்சிய 40 வீதமான நுளம்புப் பெருக்கம் குடியிருப்புக்களை அண்மித்துக் காணப்படுவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் மருந்து வகைகளை கியூபா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் டெங்கு சிகிச்சைகளுக்காக பயன்படுத்தும் டெக்ஸ்ட்ரன் சேலைன் வகையை தாய்லாந்திலிருந்து கொண்டுவருவதற்கும் சுகாதார அமை ச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக தாய் லாந்து அரசாங்கம் தமது விருப்பத்தை தெரிவி த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.(வீரகேசரி)