முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் பின் 20 வது நினைவு தினம் 2017.07.20 இன்றாகும்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் அவர்கள் படுகொலை செய்யப் பட்டு 2017.07.20 ஆம் திகதி 20 வருட நினைவு தினம் இன்றாகும்.

 திருகோணமலை மாவட்டத்திற்கு அளப்பெரும் சேவை செய்தவர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப்
 மூதூர்த் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், மன்னார் மாவட்ட அமைச்சர், துறைமுகங்கள் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்தவர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் அவர்களாவர். இவர் 1939.01.05ஆம் திகதி மர்ஹூம்களான எகுத்தார் ஹாஜியார்- ஜொஹரா உம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வராக பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
 தனது ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கற்றார்.
 இடைநிலைக் கல்வியை மாத்தளை சாஹிராக் கல்லூரியிலும், உயர்கல்வியை கண்டி சென் அந்தனீஸ் கல்லூரியிலும் கற்றார்.
 தனது 25வது வயதில் அரசியலுள் நுழைந்த இவர் 1964ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கிண்ணியா பட்டின சபைத் தேர்தலில் போட்டியிட்டு அதன் தலைவராகத் தெரிவானார். 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மூதூர்த் தொகுதி எம்.பி யாக வெற்றி பெற்றார். 1980 ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட அமைச்சராக நியமனம் பெற்றார். 1989 ஆம் ஆண்டு துறைமுகங்கள், கப்பற்றுறை இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார்.
 இவரது காலத்தில் எல்லாத் துறைகளிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், இவரது ஆரவாரமற்ற அமைதியான போக்கு காரணமாக அவை பெரிதாக ஜனரஞ்சகப் படுத்தப் படவில்லை.
 கல்வித் துறையைப் பொறுத்தவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 22 புதிய பாடசாலைகள் இவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 3 பாடசாலைகள் பெண்கள் பாடசாலைகளாகும். 3 பாடசாலைகள் இவரது சொந்தக் காணியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 14 பாடசாலைகள் இவரால் தரமுயர்த்தப் பட்டுள்ளன. 32க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு கட்டட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர பல பாடசாலைகளுக்கு ஏனைய கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 ஓன்று கூடல் மண்டபம். மாணவர் விடுதிகள், நிர்வாகக் கட்டடம், விஞ்ஞான ஆய்வு கூடம், பெவிலியன் என்பன போன்ற வசதிகளும்; பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்கப் பட்டுள்ளன.

 சகல அதிகாரங்களும் கொண்ட கிண்ணியாக் கோட்டக் கல்வி அலுவலகம் இவரால் ஆரம்பிக்கப் பட்டது.

 1988 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் நியமனம் பெற்ற சுமார் 400 ஆசிரியர்களுக்கு அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கிண்ணியாவிலும், திருகோணமலையிலும் சேவை முன்பயிற்சிகள் நடத்த இவர் ஏற்பாடு செய்தார்.

 கிண்ணியாவில் இலங்கை மின்சார சபை உப அலுவலகத்தை தாபித்தமை, உப பஸ் டிப்போவை தாபித்தமை, குறிஞ்சாக்கேணி மற்றும் மகருகிராமம் உப தபால் அலுவலகங்களை தாபித்தமை, கிண்ணியாவுக்கு குழாய் நீர் வசதியை ஏற்படுத்தியமை, பல கிராமங்களில் மின்சார விஸ்தரிப்புச் செய்தமை போன்ற பல சேவைகள் இவரால் முன்னெடுக்கப் பட்டுள்ளன.

 கிண்ணியாப் பாலத்துக்கான செலவு மதிப்பீடு மேற் கொள்வதற்காக கடலுக்கடியிலான அதன் மண் பரிசோதனை இவரது முயற்சியினாலேயே 1993 - 94 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

 இதனை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 இவரது சேவை இன, மத, மொழிகளுக்கு அப்பால் பட்டதாக இருந்ததால் எல்லா இன மக்களினதும் ஆதரவு இவருக்கு இருந்தது. குறிப்பாக பௌத்த மதகுருமார் கூட இவருக்கு ஆதரவு வழங்கினர்.

 1977 காலப்பகுதியில் ஆலங்கேணி தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவு இவருக்கு இருந்ததால் இவரது கட்சி சின்னத்தை மையமாக வைத்து சிலர் அதனை ஆனைக்கேணி என்றும் அழைத்தனர்.

 கிண்ணியாவைப் போல மூதூர், தோப்பூர், முள்ளிப்பொத்தானை, கந்தளாய், திருகோணமலை, குச்சவெளி, நிலாவெளி, இறக்கண்டி, புடைவைக்கட்டு, புல்மோட்டை, ரொட்டவெவ போன்ற பல்வேறு பகுதிகளிலும் இவரது சேவைகள் இன்றும் நிமிர்ந்து நிற்கின்றன.
 1977 ஆம் ஆண்டு முதல் 1997 இல் மரணிக்கும் வரை தொடர்ந்து 20 வருடங்கள் இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
 மிகவும் அமைதியான போக்கு, பொறுமை, நிதானம் போன்றன இவரிடமிருந்த மிகப் பெரிய மூலதனங்களாகும்.
 தனது வேலைகளுக்காக அடுத்தவர்களை நம்பியிருக்காது தானே செய்து கொள்ளும் வழக்கமும் இவரிடம் இருந்தது. சில அவசரக் கடிதங்களை இவரே தட்டச்சு செய்து கொள்ளும் பழக்கம் இவரிடம் இருந்தது.
 ஆங்கிலத்தில் புலமையுள்ள இவர் கடிதங்களை நிதானமாக தயாரிப்பதில் கண்ணுங் கருத்துமாக இருப்பார். ஆவனப் படுத்தும் ஆர்வம் இவரிடம் அதிகமாக இருந்தது.
 இதனால் பல விடயங்களை இவர் சேகரித்து வைத்திருந்தார்.
 யாருடனும் முரண்பட்டுக் கொள்ளும் பண்பு இவரிடம் இருக்காததால் எல்லா அரசியல்வாதிகளும் இவர்மீது விருப்பங் கொண்டிருந்தனர்.
 பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துக் கொண்டிருந்த காலத்தில் 1997.07.20 ஆம் திகதி இறக்கக்கண்டி மக்களின் துயர்துடைக்க செல்லும் வழியில் ஆயுததாரிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 


 அன்னாரின் ஜனாஸா பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியிருந்த நிலையில் பெரிய கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர் இறந்து 20 வருடங்கள் சென்றாலும் இவரது அர்ப்பணிப்பான சேவை காரணமாக இன்றும் பொதுமக்களால் இவர் நினைவு கூறப்படுகின்றார்.
 20 துப்பாக்கி ரவைகளால் ஈவு, இரக்கமற்ற முறையில் ஆத்திரம் அடங்க சுட்டுக் கொன்றுள்ளான். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
 அன்னாரின் ஜனாஸா பெரிய கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ்
 அன்னாருடைய பாவங்களை மன்னித்து, சுவனங்களில் உயர்ந்ததாம் ஜன்னதுல் பிர்தௌஸ் வழங்க பிராத்திப்போமாக.

ஏ.எம்.அப்துல் பரீத்,
சிரேஷ்ட ஊடகவியலாளர்
கிண்ணியா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -