க.கிஷாந்தன்-
போபத்தலாவ மெனிக்பாலம கால்நடை பண்ணையின் முகாமையாளரின் நடவடிக்கையை கண்டித்து, குறித்த பண்ணையின் ஊழியர்கள் 01.04.2017 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கால்நடை வளர்ப்பு பண்ணையின் முகாமையாளர், கடும்போக்குடன் செயற்படுவதுடன் தொழிலாளர்களின் உரிமைகளையும் மறுத்துவருகின்றார். அத்தோடு, சட்டத்துக்கு முறனான வகையில், இடமாற்றங்களைச் செய்வதுடன் பொலிஸாரின் உதவியுடன் அடக்குமுறையையும் மேற்கொள்ள முனைவதாக, ஆர்பாட்டகாரர்கள் இதன்போது தெரிவித்தனர்.
பண்ணையில் பணிபுரியும் 50ற்கும் மேற்பட்டோர், இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இவ்விடயம் தொடர்பில், பாற்பண்ணைக்கு பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரியத் தீர்வை பெற்றுத்தருவதாகவும் மேலும் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டப் போதிலும், அமைதியான முறையில் பணிபகிஷ்கரிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.