தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்' எனும் நூல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூதிடம் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் வாக்குமூலம் பெறப்படுகின்றன.
கொழும்பு-09, தெமட்டகொடயிலுள்ள கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அலுவலகத்தில் வைத்தே இந்த வாக்குமூலம் இடம்பெறுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாம் தொடர்பில் 'தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்' எனும் நூலொன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நூலிற்கு எதிராக அக்கட்சியின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் ஆகியோர் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்ற விசாரணையின் ஒரு அங்கமாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூதிடம் இந்த வாக்குமூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.