மாவட்ட ஒருக்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் முன்வைக்கப்பட்ட மக்கள் பிரச்சினைகள்
மட்டக்கப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 27.03.2017-திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர்களான கிரமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய அபிவிருத்தி மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துடையாடப்பட்டது.
இக்கூட்டத்தொடரின் போது பின்வரும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் வாதங்கள் முன்வைக்கப்பட்டு தீர்வுகள் பொற்றுக்கொடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் மக்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நியாயமான முறையில் காணிகளை பகிர்ந்தளித்தல்
அண்மையில் ஏற்பட்ட திடீர் டெங்கு நோய் தொற்றினால் பல்வேறு உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. அதில் குறிப்பாக மக்கள் அதிகமாக செறிந்து வாழ்கின்ற முஸ்லிம் பிரதேசங்களிலேயே இந்நோய் அதிகளவாக தாக்கம் செலுத்தியிருந்ததோடு, இதற்கு பிரதான காரணமாக மக்கள் மிகவும் நெருக்கமாகவும் சுவாசிப்பதற்குக்கூட தூய காற்றினை பெற்றுக்கொள்ள முடியாத அளவு அடர்த்தியாகவும் வாழ்ந்து வருவதாகும்.
எனவே கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்கு அவர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப காணிகள் பங்கிட்டு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக காத்தான்குடி பிரதேசத்திலுள்ள அதிகமானவர்களுக்கு மண்முனை பற்று பிரதேசத்தில் காணிகள் இருந்த போதிலும் அம்மக்கள் தமது சொந்த காணிகளுக்குள் வசிக்க முற்படுகின்ற வேலையில் மீண்டும் மீண்டும் அவர்களுக்கெதிராக வழக்குகள் தொடரப்பட்டு அவர்களின் சொந்த காணிகளுக்குள் அவர்கள் வசிப்பதை தடுக்கின்ற ஒரு செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே இத்தகைய விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி மகளுக்கான நியாயமான காணி பங்கீட்டு ஒன்றினை பெற்றுகொடுக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கேட்டுக்கொண்டார்.
யுத்த காலங்களில் கைவிடப்பட்ட முஸ்லிம் மக்களின் சொந்த காணிகளை அவர்களுக்கு மீள பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படல் வேண்டும்
கடந்த யுத்த காலங்களில் கைவிடப்பட்ட வவுணதீவு, வாகரை போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் மக்களின் காணிகள் தற்போது பயிர் செய்கை மற்றும் ஏனைய விடயங்களுக்காக வேறு நபர்களால் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்த நிலையிலும் தமக்கான காணி உறுதிப்பத்திரங்கள் உள்ள பேதிலும் அவர்களுக்குரிய சொந்தக்காணிகள் இதுவரை உரிய மக்களிடத்தில் ஒப்படைக்கப்படாததோடு குறித்த காணிகளுக்கான போலியான அனுமதிப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு தொடர்ந்தும் காணிகள் வேறு நபர்களால் முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்களுடைய சொந்தக் காணிகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மிக விரைவில் மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கேட்டுக்கொண்டார்.
தன்னாமுனை புனித வளவாளர் வித்தியாலயத்திற்கு முன்னால் மழைநீர் தேங்கி நிற்கும் பிரச்சினைக்கான தீர்வொன்றை பெற்றுக்கொடுத்தல்
தொடர்ச்சியாக ஒவ்வொரு மழைக் காலங்களின்போதும் தன்னாமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள தன்னாமுனை புனித வளவாளர் வித்தியாலயத்திற்கு முன்னால் அதிகளவான மழைநீர் தேங்கி நிற்கின்ற நிலைமை காணப்படுகின்றது. இதனால் இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே இப்பாடசாலைக்கு முன்னால் குறுக்கு வடிகான் ஒன்றினை அமைத்து நீரினை வடிந்தோட செய்வதன் மூலம் மிக நீண்ட காலமாக நிலவிவரும் இப்பிரச்சினைக்கான தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையினரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கேட்டுக்கொண்டார்.
கர்பலா பிரதேசத்தில் இயங்கிவரும் பொலிஸ் நிலையத்தினை அவ்விடத்திலேயே தொடர்ச்சியாக இயங்கச் செய்தல்
கர்பலா பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக பொலிஸ் காவல் நிலையம் ஒன்று இயங்கி வருகின்றது. தற்போது இக்காவல் நிலையத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறியக் கிடைத்துள்ளது.
எல்லை கிராமமான இப்பிரதேசத்தில் அதிகளவான குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதோடு இப்பொலிஸ் காவல் நிலையமானது அவ்விடத்தில் அமைந்துள்ளதனால் அப்பிரதேசத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை குறைத்துக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
எனவே இப்பிரதேசத்தில் இயங்கிவருகின்ற இக்காவல் நிலையத்தினை தொடர்ந்தும் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களினுடைய காணி சம்மந்தமான பிரச்சினைகள் மிக நீண்ட காலமாக எந்தவித தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் தொடர்ந்து வருகின்றது. இத்தகைய காணி சம்மந்தமான பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கென ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டும் அதனூடாக இதுவரை காலமும் எந்தவொரு தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்கள் யுத்த காலத்தில் கைவிடப்பட்ட தமது சொந்தக் காணிகளுக்குள் தற்போது மீள்குடியேற முயற்சிக்கிற போது 1990ஆம் ஆண்டிற்கு பிறகு அவர்களது காணி அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்பதனை காரணம்காட்டி அவர்கள் தங்களின் காணிகளை பயன்படுத்துவதனை தடுக்கின்ற ஒரு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
ஆனால் 1990ஆம் ஆண்டு காலப்பகுதிற்கு பிறகு காணப்பட்ட பயங்கரவாத சூழல் காரணமாக காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு வெளி இடங்களிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு சென்று தமது காணி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்வது சாத்தியமற்ற ஒன்றாகும்.
மேலும் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக பரிந்துரை செய்யப்பட்டு மாகாண காணி ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட சிலருடைய காணிகள் இதுவரைகாலமும் உரியவர்களிடத்தில் ஒப்படைக்கப்படாமல் குறித்த காணிகள் முறையற்ற விதத்தில் விவசாயம் செய்வதற்காக வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு காணி விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்தினால் வெளியிடப்படும் எந்தவொரு சுற்று நிருபங்களும் உரிய முறையில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படுவதுமில்லை.
எனவே தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இத்தகைய விடயங்களுக்கு இந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினூடாக உரிய தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டும். அல்லது குறித்ததொரு தினத்தில் இத்தகைய காணி விடயங்களில் சம்மந்தப்பட்ட வவுணதீவு, கிரான், வாகரை போன்ற பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி விடயங்களுக்கு பொறுப்பான அனைத்து அதிகாரிகள், பொது மக்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் உள்ளடக்கியதான கூட்டமொன்றை ஏற்பாடு செய்து இவ்விடயத்திற்கான தீர்வொன்றினை மிக விரைவில் பெற்றுக்கொடுக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கேட்டுக்கொண்டார்.
முறையற்ற விதத்தில் தனி நபர்கள் அதிகளவான காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளமை
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்கள் தாம் வசிப்பதற்கென 5 பேர்ச்சஸ் அளவான காணி கூட இல்லாத நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். யுத்த காலங்களில் தமது காணிகளிலிருந்து வெளியேறிய மக்களுக்கு அவர்களின் காணிகளை மீள பெற்றுக்கொடுப்பதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இதுவரை காலமும் மேற்கொள்ளப்படாத நிலையில் இம்மாகாணத்திலுள்ள ஒரு சில அரசியல் வாதிகளும், இதர மாவட்ட செல்வந்தர்களும், பெரும்பான்மை சமூகத்தினரும் தமது தேவைகளுக்கு அதிகமாக 400 அல்லது 500 ஏக்கர் அளவான காணிகளை கூட முறையற்ற விதத்தில் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர். இவ்வாறான விடயங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்,
எனவே இவ்வாறு தேவைக்கு அதிகமாக முறையற்ற விதத்தில் காணிகளை வைத்திருக்கும் அனைவரின் விபரங்களையும் ஒவ்வொரு பிரதேச செயலாளர்களும் அடுத்து வரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மதுபானசாலைகளை இல்லாதொழித்தல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 67 மதுபான சாலைகள் உள்ளன. இவற்றினால் பல்வேறு சமூக சீர்கேடுகள் ஏற்படுவதனை சுட்டிக்காட்டி முடியுமான அளவு மதுபான சாலைகளை மூடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின் போது தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை இவற்றில் ஒரு மதுபான சாலையினையேணும் இதுநாள் வரை மூடப்படவில்லை.
இருப்பினும் தற்போது நூறு வீத வரிச் சலுகையுடன் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் கல்குடாவில் பாரியதொரு மதுபான சாலை ஒன்று திறப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது,
எனவே ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இம்மாவட்டத்தில் மதுபானத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கேட்டுக்கொண்டார்.
கொம்பர் சேனை விவசாய காணிகளுக்கு நீர் வழங்கல்
கொம்பர் சேனை பிரதசத்தில் உள்ள 950 ஏக்கர் வயல் காணிகளுக்கு உரிய முறையில் நீர் கிடைக்காமை காரணமாக வயல் நிலங்கள் முற்றாக சேதமடைகின்ற நிலைமை ஏற்பட்டது.
எனவே அரச அதிபரின் தலைமையில் விவசாயக்குழுக்கூட்டம் கூட்டப்பட்டு அதனூடாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நீர்ப்பாசன திணைக்களத்தினூடாக இப்பிரதேசத்திற்குரிய நீர் வசதியினை ஏற்படுத்தி வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் கடந்த காலங்களில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் தற்போது மூன்று மாதங்கள் கடந்த நிலையில் விவசாயக்குழுக் கூட்டங்கள் எதுவும் கூட்டப்படாமலும் இவ்விடயம் தொடர்பாக எந்தவொரு மேலதிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையிலும் காணப்படுகின்றது.
எனவே இவ்அனைத்து விடயங்களிலும் பொதுமக்களுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் சுட்டிக்காட்டி காட்டினார்.