பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாதவாறு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ள 13 கலைப்பீட மாணவர்களும் தம்மீதான தடை நீக்கப்பட வேண்டும் எனக் கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாகவுள்ள இராமநாதன் வீதியில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி, சனிக்கிழமை இடம்பெற்ற புது முக மாணவர் வரவேற்பு நிகழ்வில் ஏற்பட் அசம்பாவிதங்கள் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 13 பேருக்கு காலவரையறையின்றி வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த 11 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டிருந்த கலைப்பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்லவில்லை.
நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து கலைப்பீட மாணவர்கள் பல்வேறு கண்டன நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த (29) காலை முதல் கலைப்பீட மாணவர்கள் அமைதியான முறையில் நிர்வாகக் கட்டடத் தொகுதியின் முன் அமர்ந்து, பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்தினர்.
வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்காத நிலையில் குறிப்பிட்ட 13 மாணவர்களும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கலைப்பீட மாணவர்களும் அவ்விடத்தில் கூடியுள்ளனர்.