எஸ்.ஹமீத்-
மிக அண்மையில் அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரில் இயங்கும் பியூவ் (PEW) என்னும் ஆராய்ச்சி நிலையமானது இஸ்லாமிய வளர்ச்சி பற்றிய தனது ஆய்வின் முடிவை வெளியிட்டிருக்கிறது. இதில் ''இஸ்லாமானது 2070 ஆம் ஆண்டுக்குள் கிறிஸ்தவத்தை மேவி உலகின் மிகப் பிரபலமான மதமாக மாறும்.'' என எதிர்வு கூறியிருக்கிறது. மேலும், ''புலம் பெயர்தல் காரணமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் முஸ்லிம்களின் தொகை அதிகரித்து வருகின்ற நிலையில் இன்னும் 53 வருடங்களில் உலக சனத்தொகையில் முஸ்லிம்களின் தொகையானது கிறிஸ்தவர்களின் தொகையைவிட அதிகமாகும்!'' என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இந்தச் செய்தி உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. செய்தியைப் படித்து நாமும் பரவசமடைந்து ''அல்ஹம்து லில்லாஹ்.'' எனச் சொல்லிக் கொண்டோம்.
ஆனால், இந்தச் செய்தி முஸ்லிம்களை சந்தோஷப்படுத்துத்துவதற்காகவன்றி, முஸ்லிம்களின் எதிரிகளுக்கு விழிப்புணர்வூட்டி அவர்களை எச்சரிக்கை செய்வதற்கானதே என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருப்போம்...?
இந்த ஆய்வின் முடிவாக ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் புலம் பெயர்வை அங்கீகரிக்கக் கூடாது என்ற இரகசியக் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அவ்வாறு அங்கீகரித்தால், ஐரோப்பா முஸ்லிம்களின் ஆதிக்கத்துக்குள் வந்துவிடுமெனச் சங்கேதமாக அறிவுறுத்தப்படுகிறது.
அத்தோடு, ''உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் முஸ்லிம்களின் சனத்தொகை 2010 ஆம் ஆண்டில் 1.6 பில்லியனாக இருந்தது. இது உலக மொத்த சனத்தொகையின் சுமார் 23 சதவீதமாகும். ஆனால் இந்த தொகை கிறிஸ்தவர்களின் தொகையுடன் ஒப்பிடுகையில் சுமார் 2.2 பில்லியனால் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏனைய மதத்தவர்களை விடவும் முஸ்லிம்களின் இன விருத்தி விகிதாசாரம் அதிகமாகவுள்ளதால் அவர்களின் சனத்தொகை மென்மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது'' என மேற்படி ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கிறது. இதன் மூலம் முஸ்லிம்களை வேரறுக்கத்த துடிக்கும் நாடுகளை உசுப்பி, முஸ்லிம்களின் பிறப்பு வீதத்தில் கணிசமானளவு தாக்கங்களைச் செலுத்த வேண்டும் என்ற மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
''முஸ்லிம் பெண்கள் சாராசரியாக 3.1 பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறார்கள். ஏனைய அனைத்து மத குழுக்களைச் சேர்ந்த பெண்களும் சராசரியாக 2.3 பிள்ளைகளையே பெற்றுக் கொள்கின்றனர்.'' என்றும் அந்த ஆராய்ச்சி நிறுவனம் கூறி, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அங்குள்ள முஸ்லிம்கள் மீது 'குடும்பக் கட்டுப்பாடுகளுக்கான சட்டங்களை' அமுல்படுத்த வேண்டுமென்று சொல்லாமற் சொல்லியிருக்கிறது.
''2050 ஆம் ஆண்டில் உலக சனத்தொகையில் அதிகளவு முஸ்லிம்களைக் கொண்ட நாடாக இந்தியா மாறும்.'' என மேற்படி ஆய்வு அடித்துச் சொல்லியிருக்கிறது. இது போதாதா, இந்திய சிவசேனாவுக்கும் ஆர். எஸ். எஸ். க்கும், நரேந்திர மோடிக்கும்....?ஏற்கனவே வெறும் வாயை மென்று கொண்டிருக்கும் அந்தக் காவிக் கூட்டம் இனி வாய்க்குள் அவலை விட்டுக் குதப்பப் போகிறது. ஆக, அந்த அமைப்பானது இந்தியாவையும் தூண்டி விட்டுள்ளது.
''அமெரிக்காவில் முஸ்லிம்களின் தொகை 3.3 மில்லியனாக இருந்தது. இது அந்நாட்டின் மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதமாகும். இந்த சதவீதம் 2050 ஆம் ஆண்டில் 2.1 வீதமாக உயர்ந்து விடுமெ''ன்று சொல்லி அமெரிக்காவுக்கும் அது நெருப்புப் பழத்தைக் கொடுத்திருக்கிறது. சும்மாவே முஸ்லிம்களுக்கெதிராக ஆடுகின்ற டொனால்ட் ட்ரம்ப் போன்ற பூசாரிகளுக்கு சாம்பிராணிப் புகை போட்டது போல் ஆகிவிடாதா, இந்த விடயம்...?
எனவே, மொத்த உலகத்தையும்-குறிப்பாக-முஸ்லிம் விரோத சக்திகள் அனைத்தையும் தட்டியெழுப்பி, அவர்களை ஜாக்கிரதையாக இருக்கும்படியான செய்தியைத்தான் இந்த ஆய்வு நிறுவனம் வழங்கியிருக்கிறது என்பதுவே நிதர்சனம்.
ஆயினும், அந்த அல்லாஹுத் த ஆலாவின் அளப்பெரும் கருணையினாலும் அவனது அளவிட முடியா பேராற்றலினாலும் இஸ்லாம் இந்த உலகில் செழித்து வளரும். பிறப்பு விகிதத்தினால் மட்டுமன்றி, இஸ்லாமல்லாதோர் இதன் உன்னதத்தையும் உண்மையையும் கண்டு இம் மார்க்கத்தைப் பின்பற்றத் தொடங்குவதனாலும் இந்த இனிய மார்க்கம் தழைத்துத் தரணியெங்கும் படரும். அல்லாஹ் நாடினால் அதற்கு ஐம்பது வருடங்களெல்லாம் தேவையில்லை....மிக அவசரமாகவே அந்த மாற்றம் இந்த அவனியில் நிகழ்ந்து விடும். இன்ஷா அல்லாஹ்!
