க.கிஷாந்தன்-
நல்லிதண்ணி பகுதியிலிருந்து அட்டன் நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அட்டன் டிப்போ பஸ் ஒன்று நோர்வூட் பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த ஒருவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் 71 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பஸ் 04.01.2017 அன்று சுமார் 71 பயணிகளை நல்லதண்ணியிலிருந்து ஏற்றிக்கொண்டு அட்டன் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது திடீரென பஸ்ஸில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடை செயலிழந்து நோர்வூட் ரொக்வூட் பகுதியில் மாலை 4.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி தமது சாமர்த்தியதால் எதிர்பக்கத்திற்கு பஸ்ஸினை திருப்பி மண்மேட்டில் மோத வைத்து பஸ்ஸினை நிறுத்தியதனால் ஏற்படவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பஸ்ஸின் பயணிகள் வேறு ஒரு பஸ்ஸின் மூலம் ஏற்றி அட்டன் வரை அனுப்பப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.