எஸ். ஹமீத்-
இலண்டனிலுள்ள குயீன் எலிசபத் ஒலிம்பிக் பூங்காவில் 50 மீற்றர் வேக ஓட்டப் போட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி மற்றும் இளவரசர் வில்லியத்தின் மனைவி கேட் ஆகியோர் பங்கு பற்றினர். இதில் தன் அண்ணனையும் அண்ணியையும் பின்தள்ளி, இளவரசர் ஹரி முதலிடத்தைப் பெற்றார்.
தடகள ஓட்ட நட்சத்திர வீரர்களும் ஏப்ரல் மாதம் லண்டனில் நடக்கவிருக்கும் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றுகின்ற சில அமெச்சூர் வீரர்களும் இந்தப் பந்தயத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.
ஹரி மற்றும் வில்லியம், கேட் ஆகியோரால் நடத்தப்படுகின்ற மனநலம் குன்றியவர்களுக்கான (Heads Together) என்ற அமைப்பின் பிரசார நோக்கங்களுக்காகவே இந்த ஓட்டப் போட்டி நடைபெற்றுள்ளது.
இதில் பார்வையாளராகக் கலந்து கொண்ட உலக மரதன் சாதனைக்குச் சொந்தக்காரியான பவுலா ரெட்கிளிப் போட்டி முடிந்த பின்னர் வேடிக்கையாகக் கருத்துக் கூறும் பொது ''இளவரசர் வில்லியம் தன் மனைவியின் எல்லைக்குள் புகுந்து ஓடியதால் அவரை இதிலிருந்து நீக்கியிருக்க வேண்டும்!'' என்று குறிப்பிட்டார்.