காரைதீவு நிருபர் சகா-
இலங்கையின் 69வது சுதந்திர தினத்தையொட்டி அம்பாறை மாவட்ட பிரதான வைபவம் நாளை அம்பாறையில் அம்பாறை அரச அதிபர் துசித பி.வணிகசேகர தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக அமைச்சர் தயாகமகே கலந்து சிறப்பிக்கவிருக்கின்றார். அதேவேளை ஏனைய அரசியல்பிரமுகர்களும் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை நகரின் மணிக்கூட்டுச்சந்தியிலிருந்து மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் முப்படையினரின் ஊர்வலம் மூவின பாடசாலைகளின் பாண்ட் வாத்திய ஊர்வலம் சகிதம் அதிதிகள் வரவேற்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பிரதான நிகழ்வுத்திடலில் தேசியக்கொடி ஏற்றும் வைபவம் நடைபெறும்.
அங்கு மூவின மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது. சுதந்திர தின உரைகளும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் தெரிவித்தார்.