இலங்கையின் கிழக்கு திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு நடத்தப்படுவதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. அமைச்சர் சரத் பொன்சேகா, புதுடில்லியில் இந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது பேச்சுவார்த்தை குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். சீனா இலங்கையில் செலுத்தும் ஆதிக்கத்தை சமப்படுத்தும் வகையில் இந்த பேச்சுக்கள் இடம்பெறுவதாக தகவல்களும் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், சமநிலைப்படுத்தல் அல்லது நீண்டகாலத்துக்கு இலாபத்தை தராத திருகோணமலை துறைமுக அபிவிருத்திகள் தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படவில்லை என்று இந்திய தரப்பு கூறியிருப்பதாக இந்திய இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும், இலங்கையில் முன்னெடுக்கப்படும் வெளிநாடுகளின் வரவுகள் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடாது என்பதிலேயே அக்கறை கொண்டிருப்பதாக இந்திய தரப்பை கோடிட்டு இந்திய இணையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், திருகோணமலை துறைமுகம் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றினால் நவீனப்படுத்தப்படவுள்ளதாக இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தமையையும் இந்திய இணையம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.