க.கிஷாந்தன்-
அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் 24.01.2017 அன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 57 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்றில் குறித்த பெண் மோதுண்டதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இடத்தில் விபத்துக்குள்ளான பெண் வீதியின் ஓரத்தில் பயணித்த வேளையில் வழியில் சென்ற வேன் குறித்த பெண்ணின் மீது மோதுண்டு விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலத்த காயங்களுடன் பிரதேசவாசிகளால் இப்பெண்ணை வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுகையில் வழியில் இவர் உயிர் பிரிந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அட்டன் – செனன் பகுதியை சேர்ந்த மலையன் பட்டம்மா (வயது -57) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் விபத்துக்குள்ளான வேனின் சாரதியை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.