அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தையும் மாவட்டத்தில் முதலிடத்தையும் விஞ்ஞானப் பிரிவில் பெற்ற கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி சாதனை மாணவன் பத்ம கைலநாதன் டிலூஜனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மெஸ்ரோ அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (20) வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் அதிபர் அருட்தந்தை பிறைனர் செலர் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்; விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் மெஸ்ரோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த சாதனை மாணவன் பத்ம கைலநாதன் டிலூஜனை பொன்னாடை போர்த்தி மடிகணினி வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் மெஸ்ரோ அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நசீல், மெஸ்ரோ அமைப்பின் செயலாளர் , பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, கார்மேல் பற்றிமா கல்லூரி பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த பாடசாலையிலிருந்து அதிகமான மாணவர்கள் பல்வேறு துறைகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். எனவே இம்மாணவர்களின் வெற்றிக்கு காரண கர்த்தாவாக திகழ்ந்த குறித்த கல்லூரி அதிபருக்கு பிரதி அமைச்சர் இதன்போது பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
கல்முனை வரலாற்றில் முதல் முறையாக மேற்படி சாதனை புரியப்பட்டுள்ளமைக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் முதல் முதலாக பாராட்டுக் கடிதத்தை கல்லூரிக்கு அனுப்பி வைத்ததோடு இப்பாராட்டு நிகழ்வையும் தனது அமைப்பின் ஊடாக மேற்கொண்டுள்ளதை கல்லூரி அதிபர் மனதார பாராட்டினார். பிரதி அமைச்சரின் இவ்வாறான செயற்பாடுகள் இப்பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சிக்கு தூண்டுகோலக அமைவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
![](https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif)