மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாத நிலையில் அவரின் ஆதரவுடன் கோட்டாபய அல்லது பெசில் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவர்களுக்கான வெற்றிவாய்ப்பே அதிகம் உள்ளது.
ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் படுதோல்வி அடைவார் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த பொது தேர்தலில் ஐ தே கவுக்கு வாக்களித்த மக்கள் கூட ரணில் பிரதமரான இந்த ஆட்சியில் வெறுத்துப்போயுள்ளனர். குறிப்பாக ஐ தே க ஆட்சி வந்தால் தமது வர்த்தகத்துக்கு நல்லது என எதிர்பார்த்த கொழும்பு முஸ்லிம்களும் நாட்டின் நகர பிரதேச முஸ்லிம்களும் தமது வர்த்தகங்களை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். இவர்கள் அனைவரும் நிச்சயம் ஐ.தே.க.வுக்கு எதிராகவே வாக்களிப்பர்.
அதே வேளை ஒரு தடவை மட்டுமே ஜனாதிபதியாக இருப்பேன் எனக்கூறிய மைத்திரி அவர்கள் தேர்தலில் போட்டியிடுவது தனது வாக்கை தானே மீறியவர் என்ற வரலாற்று பெயரை அவருக்கு ஏற்படுத்தும் என்பதால் அவர் போட்டியிட மாட்டார். அப்படித்தான் போட்டியிட்டாலும் படு தோல்வியையே அடைவார். ஒரு மோசமான நிர்வாகத்தைக்கொண்ட, அபிவிருத்திகள் குறைந்த ஜனாதிபதி ஆட்சி மைத்திரியுடையது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் வந்தால் சிங்கள இனவாதம் ஒழிக்கப்பட்டு தம் வாழ்வு சிறப்புறும் என கற்பனை செய்த சிறுபான்மை சமூகங்கள் இன்று தம் தலையில் தாமே அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கும் அளவு மைத்ரி அரசு இனவாதிகளை மடியில் வைத்து ஊட்டி வளர்க்கிறது.
இத்தகைய நிலையில் மஹிந்த தரப்பில் கோட்டாபய அல்லது பெசில் போட்டியிடும் நிலை உள்ளதால் மஹிந்தவை எதிர் பார்க்கும் சிங்கள மக்கள் முன்னரை விட அதிகம் இவர்களுக்கு வாக்களிக்கும் நிலையே கள நிலையாகும். ராஜபக்ஷ அணிக்கு பயந்து உள்ளூராட்சி தேர்தலையே நடத்தாமல் ஒரு வருடமாக அரசு இழுத்தடிப்பதன் மூலம் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு ஜனாதிபதி தேர்தலை பயன் படுத்துவது பற்றி நிதானமாக சிந்திக்க வேண்டும் என்பதை உலமா கட்சி வலியுறுத்துகிறது.
2005 முதல் அனைத்து ஜனாதிபதி தேர்தல்களிலும் பதவிகள் பற்றி பேசாமல் சமூகம் பற்றியே சிந்தித்துச சிறந்த முடிவுகளை எடுத்த உலமா கட்சியுடன் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு செயலாற்ற முன் வருவது சமூகத்துக்கான கோரிக்கைகளை ஜனாதிபதி தேர்தல் மூலம் வென்றெடுக்க வழி வகுக்கும்.