அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சாய்ந்தமருது கோட்ட பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் யஹியாகான் பவுன்டேஷன் ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (21) சனிக்கிழமை குறித்த அமைப்பின் ஸ்தாபக தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான ஏ.சி. யஹியாகான் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக எம்.எஸ். அப்துல் ஜலீல், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ. றஹ்மான், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் அப்துல் மஜீட், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. அப்துல் பசீர், அல்-ஹிலால் வித்தியாலய ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட், சாய்ந்தமருது கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பணப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.