அபு அலா-
களுவாஞ்சிக்குடியில் 514 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை எதிர்வரும் 1 ஆம் திகதி எமது நாட்டின் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று மாலை (23) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் குறித்த வைத்தியசாலை திறப்பு விழா தொடர்பில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.
இதில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கே.முருகாணந்தம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்திலுள்ள திணைக்களத் தலைவர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, விளையாட்டுக்கழகங்களின் தலைவர்கள், மாதர் சங்க தலைவிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று தங்களின் கருத்துத்துக்களை முன்வைத்து குறித்த நிகழ்வை மிகத்திறன்பட நடாத்தி வைக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இக் கலந்துரையாடலின் பின்னர் திறக்கப்படவுள்ள புதிய கட்டிட நிர்மாண வேலைகளை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.