ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
புலானாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை மட்டக்களப்பு கல்குடாவில் வைத்து திங்கட்கிழமை (23.01.2017) மாலை விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் பாணமை சாஸ்திரவெளி விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி எம்.ஐ. இப்றாஹீம் தலைமையிலான படையினர் நடத்திய தேடுதலில், வலம்புரிச் சங்கை தம்வசம் தை;திருந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு வலம்புரிச் சங்கும் மீட்கப்பட்டது.
சந்தேக நபர்கள் மாத்தளை, வாழைச்சேனை மற்றும் பொலொன்னறுவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஓன்றரை அடி நீளமான இந்த பெறுமதி மிக்க வலம்புரிச் சங்கு மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வலம்புரி சங்கு மற்றும் சந்தேக நபர்களை நபர்களையும் மட்டக்களப்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாரி என். சுரேஸ்குமார் தெரிவித்தார்.