இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை இன்று அதிகாலை தாக்கிய நிலநடுக்கத்துக்கு 25 பேர் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
குறித்த நிலநடுக்கமானது 6.5 அலகு ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.
பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் வாழும் நாடான இந்தோனேசியாவில் இன்று அதிகாலை தொழுகைக்காக பலர் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் தங்களது வீடுகளைவிட்டு வெளியில் ஓடி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
சுனாமி தாக்கலாம் என்ற அச்சத்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல பலர் தயக்கம்காட்டி வருகின்றனர்.
அடுத்தடுத்து, 5 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் வீடுகள் மட்டுமின்றி கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் மண்மேடாகிப் போனது. இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி மூழுவீச்சில் நடைபெறுகிறது.
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
எனினும் குறித்த பூமியதிர்ச்சியினை தொடர்ந்து சுமானி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2004 ஆம் ஆண்டு சுமானி பேரலை ஏற்பட்ட போது, இதே பகுதியிலேயே பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்க பூகோள ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.


