நான் பாராளுமன்றத்தில் கடந்த பத்தரை வருடங்கள் இருந்தபோது கேட்காத முஸ்லிம் விவாக சட்டத்திருத்தம் தொடர்பில் ஆட்சியில் இல்லாத என்னிடம் இப்பொழுது கேட்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ரேணுகா ஹோட்டலில் இன்று இடம்பெற்ற Search for Common Ground என்ற நிறுவனத்தின் பெண்கள் தொடர்பான ஊடக அறிக்கையிடல் செயலமர்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த செயலமர்வில் பேரியல் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
கடந்த பத்தரை வருடங்கள் நான் பாராளுமன்றத்தில் இருந்தேன் எனினும் இந்த முஸ்லிம் விவாக சட்டமாற்றம் தொடர்பாக என்னிடம் யாரும் கதைக்கவில்லை மாறாக இப்பொழுது ஆட்சியிலில்லாத என்னை அந்த முஸ்லிம் விவாக சட்ட மாற்றத்தை பெற்றுத்தருமாறு கோரினால் நான் என்ன செய்வது.
மேலும் பெண்களை நாம் நல்லவர்களாக, ஆளுமை மிக்கவர்களாக மாற்றலாம், சேவை செய்பவர்களாக மாற்றலாம். இவ்வாறான செயலமர்வுகள் மூலம் பெண்களுக்கு தகவல்களை வழங்கலாம் என்றாலும் பெண்களை நம்பி யாரும் இன்றைய நிலையில் வாக்களிக்கத்தயாரில்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும்.
மேலும் இன்று பாராளுமன்றத்திலுள்ள பெண் பிரதிநிதிகள் கூட பரம்பரை வழியாக வந்தவர்களாக இருப்பார்கள் அல்லது மக்கள் பாவப்பட்டு வாக்களித்தவர்களாக இருப்பார்கள் ஆனால் புதிதாக எந்த பெண்ணும் பாராளுமன்றம் சென்றதாக தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் பேரியல் அஷ்ரப் பிரதம விருந்திராக கலந்துகொண்டதுடன் Search for Common Ground நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் மற்றும் மும்மொழி ஊடகங்களிலும் பணியாறுகின்ற ஊடகவியலாளர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.