இம்முறை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற தமிழ் இலக்கிய விழாவினையொட்டி கிழக்கு மாகாண மட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கிடையே நடத்தப்பட்ட படைப்பாக்கப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கற்பித்து வரும் ஆசிரியர் எம்.ஏ.றமீஸ் புகைப்படக் கலைஞர் போட்டியில் பங்கு கொண்டு மாகாண மட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டார்.
இம்மாதம் 20,21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மகஜனக் கல்லூரியில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாளான 22ஆம் திகதி சனிக்கிழமை இவருக்கான பரிசில்களும் கௌரவமும் வழங்கப்படவுள்ளன.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இவர் அண்மையில் அம்பாறை மாவட்ட ஊடகவிலாளர் சம்மேளனத்தின் இருபதாவது வருட நிறைவு விழாவில் சிறந்த ஊடகவியலாளராக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் தற்போதைய ஆங்கில ஆசிரியராகவும் இவர் சேவையாற்றி வருகின்றார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தின் பிறை எம்.எம்.வானொலி சேவையின் அறிவிப்பாளரும், அரச சார்பற்ற நிறுவனமொன்றின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளருமான இவர் ஊடகத்துறையில் 17 வருட காலமாக இணைந்து சேவையாற்றி வருகின்றார்.
கடந்த 1999 காலப்பகுதியில் நவமணி பத்திரிகையின் செய்தியாளராக ஊடகத்துறைக்குள் பிரவேசித்த இவர் 2000ஆண்டு காலப்பகுதியில் தினக்குரல் பத்திரிகையின் அட்டாளைச்சேனை செய்தியாளராக தினசரிப் பத்திரிகையினுள் பிரவேசம் பெற்றார்.
தற்போது வீரகேசரிப்பத்திரிகையின் தீகவாபி நிருபராகவும், தினகரன் பத்திரிகையின் அட்டாளைச்சேனை நிருபராகவும், விடிவெள்ளி பத்திரிகையின் அக்கரைப்பற்று பிரதேச நிருபராகவும், மெற்றோ நியுஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் சிலவற்றுக்கும் இணையத்தள செய்தி சேவைகளுக்கும் எம்.ஏ.றமீஸ் என்ற பெயரில் எழுதி வருகின்றார்.
ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்து கொண்ட இவர்; இணையத்தள சேவையொன்றின் செய்தி முகாமையாளராக செயற்பட்டு வருகின்றார்.
ஊடகவியலாளர்களின் திறன்களை விருத்தி செய்யும் வகையில் வெகுசன ஊடக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அசி தசி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அண்மையில் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.ஏ.றமீஸ் அமைச்சர் கயந்த கருணாதிலக்க விடமிருந்து புலமைப் பரிசிலைப் பெற்றுக் கொண்டார்.
பாடசாலைக் காலம் முதல் தற்போது வரை பல்வேறு பட்ட துறைகளில் பிரகாசித்து வரும் இளம் கவிஞரான இவர் பல தேசிய மட்ட விருதுகளையும் பரிசில்களையும் பெற்றுக் கொண்டதுடன் மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் பல்துறைப் போட்டிகளில் பங்கு கொண்டு பல்வேறான வெற்றிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.