பம்பலப்பிட்டி பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவரை கொழும்பு குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர்கள் 22 மற்றும் 23 வயதானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பம்பலபிட்டியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமான், கடந்த 21ம் திகதி இரவு நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
இந்தநிலையில், உயிரிழந்த நபரொருவரின் பழுதடைந்த நிலையிலான சடலம், மாவனெல்ல பகுதியில் இருந்து, கடந்த 24ம் திகதி இரவு மீட்கப்பட்டது. இதனையடுத்து, சடலத்தில் இருந்த சில அடையாளங்கள் மற்றும் ஆபரணங்களைக் கொண்டு அது தனது மகன் என சுலைமானது தந்தை குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.