அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுகின்ற சடலங்கள் குளிரூட்டிகளில் வைக்கப்படுவதில்லையென மக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து புதிய குளிரூட்டி பெட்டிகள் பொறுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுருந்தும் சட்ட வைத்தியரின் அறிக்கைக்காக உற்படுத்துகின்ற ஓரிரு சடலங்கள் மாத்திரம் குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் வைப்பதாகவும் மற்றைய சடலங்கள் பிரேத அறையில் வௌியில் வைக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் செய்த முறைப்பாட்டையடுத்து புதிய 08 குளிரூட்டிகள் பொறுத்தப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
தூர இடங்களிலிருந்து சட்ட வைத்திய பரிசோதனைக்காக கொண்டு வரப்படுகின்ற சடலங்களையும்- வௌி நாட்டவர்களுக்கு மரணங்கள் நிலவுகின்ற போது வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல தேவையில்லாத விதத்தில் பாதுகாத்து வைக்கக்கூடிய குளிரூட்டி வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மருந்து களஞ்சியசாலைகளில் மருந்துகளை சரியான வெப்பநிலைக்கு வைத்துக்கொள்ளும் நோக்கில் வைத்தியசாலைகளில் அனைத்து களஞ்சியசாலைகளும் குளிரூட்டிகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை பொது மக்கள் நோயாளர்கள் பிரச்சினைகள் ஏதாவது இருப்பின் தமது அலுவலகத்திற்கு வருகை தந்து தெரியப்படுத்த முடியமெனவும் அவர் குறிப்பிட்டார்.