கரும்பின் டொன் ஒன்றுக்கான கொள்வனவு விலையை அதிகரிப்பது தொடர்பில் கரும்பு செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் இணக்கப்பாட்டுடன் தீர்மானத்துக்கு வருமாறு அம்பாறை மாவட்ட செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும், கரும்புச் செய்கையில் ஈடுபடுவோருக்கு கடன் உதவிக்கான மத்திய வங்கியின் சகாய, மானிய அடிப்படையிலான செயற்றிட்டத்தின் கீழ் வட்டி வீதத்தை திரைசேறியின் ஏற்பாட்டுடன் அரைவாசியாக குறைத்து வழங்க நடவடிக்கை எடுப்பது பற்றி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் கரும்பு செய்கையில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண்பது தொடர்பான இன்னொரு கட்ட முக்கிய கலந்துரையாடலொன்று நிதி அமைச்சில் வியாழக்கிழமை (28) முற்பகல் நடைபெற்றபோதே இது பற்றி ஆராயப்பட்டதாக அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார்.
நிதி அமைச்சில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலைமையில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், தயா கமகே, அம்பாறை மாவட்ட செயலாளர் மற்றும் கரும்பு தொழிற்சாலை முகாமைத்துவத்தினர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
கடன் எடுத்து முதலீடு செய்வதைவிட, திட்டமிட்ட அடிப்படையில் வர்த்தக முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும், இவை பற்றி அடுத்த புதன் கிழமைக்கு முன்; அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு திறைசேரி உயரதிகாரிகள் கேட்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் அடுத்தவாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலைமையில் கூடி ஆராய்ந்;து முடிவு காண்பதாக தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இது தொடர்பான சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை (21) நிதி அமைச்சில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலைமையில் அமைச்சர்கள், பிரதியமைச்சர், சீனித் தொழிற்சாலை முகாமைத்தவத்தினர், கரும்பு உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தின் கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் கடன் பளு, வறுமை போன்றவற்றினால்; பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.