க.கிஷாந்தன்-
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் வைத்து 16 வயதுடைய பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த 22 வயதுடைய குடும்பஸ்தரை தோட்ட பொதுமக்கள் பிடித்து சம்பந்தப்பட்ட நபரை தாக்கிய பின் பொலிஸாரிடம் 19.07.2016 அன்று மாலை 03 மணியளவில் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
திஸ்பனை பகுதியில் இருந்து ஆகரா தோட்டத்திற்கு சென்று தனியாக வீடு திரும்பி கொண்டிருந்த மாணவியை சம்பந்தப்பட்ட நபர் பின் தொடர்ந்ததுடன் மாணவியின் கழுத்தினை பிடித்து வன்புணர்வுக்கு முயற்சித்தபோது அப்பாதையின் ஊடாக சென்ற சிலரால் மாணவி காப்பாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ஈடுப்பட்ட நபரை பிடிக்க முயற்சித்தபோதும் சம்பந்தப்பட்ட நபர் தப்பி ஓடியுள்ளார்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் அப்பகுதிக்கு சென்று மேற்படி நபரை பிடிக்க முயற்சித்த போது சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவாகியுள்ளார்.
இவர் தோட்டத்திற்கு வருவதை அவதானித்து கொண்டியிருந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு வருவதை கண்டதையடுத்து சுற்றிவளைத்து முடக்கியதோடு சம்பந்தபட்டவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து சம்பந்தபட்டவரின் உடம்பில் காயங்கள் காணப்பட்டதால் அவரை பொலிஸாரின் பாதுகாப்பில் அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு அழைத்துசென்று சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாணவி தற்போது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருவதோடு குறித்த நபரை நுவரெலியா மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.