வீடமைப்பு தேவைக்காக கொழும்பில் அரச காணிகள் பற்றிய தகவல் திரட்ட பணிப்பு - அமைச்சர் மனோ



டகொழும்பு, மத்திய கொழும்பு தொகுதிகள் உள்வரும் கொழும்பு பிரதேச பகுதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி சபை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை, துறைமுக அதிகாரசபை,கொழும்பு மாநகரசபை, மாவட்ட செயலகம் ஆகிய அரச அமைப்புகளுக்கு சொந்தமான மற்றும் பயன்படுத்தபடாத தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை திரட்டும்படி கொழும்பு மாவட்ட எம்பியும், அமைச்சருமான மனோ கணேசன், கொழும்பு பிரதேச செயலக பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு மாநகரத்தில் வாடகை வீடுகளில் வசிக்கும் மத்திய தர மற்றும் குறைந்த வருமான பிரிவு மக்களின் மக்களின் வீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று தரும் நோக்கில் பாரிய வீடமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் துறையினர் தயாராக இருப்பதால், உரிய காணிகளை அடையாளம் காண வேண்டிய தேவையை தானும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் உணர்ந்து இருப்பதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார். 

கொழும்பு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம், இணைத்தலைவர்களான அமைச்சரவை அமைச்சர்கள் மனோ கணேசன், ரவி கருணாநாயக்க, பிரதியமைச்சர் ஏ.எச்.எம். பெளசி ஆகியோர் தலைமையில் கொழும்பு கோட்டை பிரிஸ்டல் வீதி கலாநிதி அஞ்சலோ மண்டபத்தில் நடைபெற்றது. இது தொடர்பில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

வட கொழும்பிலும், மத்திய கொழும்பிலும் வாழும் மத்திய தர மற்றும் குறைந்த வருமான பிரிவு மக்களின் வீடமைப்பு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் கடப்பாட்டை நமது அரசு உணர்ந்து உள்ளது. வாடகை வீடுகளில் வாழுகின்ற மக்களை வாழ்நாள் முழுக்க வாடகை செலுத்திக்கொண்டே, மாறி, மாறி வீடுகளை தேடி அலைந்து திரிய விட அப்படியே முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். 

எனது அமைச்சில் ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட பிரிவில் வீட்டு தேவை கொண்டோரின் தகவல்கள் திரட்டப்படுகின்றன. அதேவேளை குறைந்த மற்றும் மத்திய தர வருமானம் கொண்ட பிரிவினரின் பொருளாதார இயலுமைகளுக்கு பொருந்தி வரும் விதத்தில், புதிய வீடமைப்பு திட்டங்களை அமைக்கவும், அவற்றில் முதலீடு செய்யவும் அரசு மற்றும் தனியார் நிதி வாய்ப்புகள் இப்போது ஏற்பட்டு உள்ளன. எனவே உரிய காணிகளை அடையாளம் காண வேண்டிய பணியை இப்போது ஆரம்பித்து உள்ளோம்.

இதே நிலைப்பாட்டில் நிதி அமைச்சர் எனது நண்பர் ரவி கருணாநாயக்கவும் இருக்கின்றார். இந்த விவகாரத்தில் இணைந்து செயற்பட நாம் இருவரும் முடிவு செய்து, காணிகளுக்கு உரிமையுள்ள அரச நிறுவன அதிகாரிகளை அழைப்பித்து விபரங்களை திரட்டும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம். இது தொடர்பில் உரிய பணிப்புரைகள் கொழும்பு பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -