நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற பொருளாதார முகாமை குழு கூட்டத்தின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்கிரம, நவீன் திசாநாயக்க மற்றும் திறைசேரி ஆலோசகர் பாஸ்கரலிங்கம் உட்பட அரச அதிகாரிகள் இடையில் இடம்பெற்ற தோட்ட தொழிலாளர்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. 2015 ஏப்ரல் முதல் கணக்கெடுக்கப்பட்டு ரூ. 2500/= இடைக்கால நிவாரண கொடுப்பனவு தோட்ட தொழிலாளருக்கு, புதிய கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகும்வரை வழங்கப்படும்.
2. இதன் மூலம் தோட்ட தொழிலாளருக்கான இன்றைய நாட்சம்பளம் ரூ. 620 உடன் ரூ. 100மேலதிகமாக சேர்க்கப்பட்டு ரூ. 720 நாட்சம்பளம் வழங்கப்படும்.
3. இந்த மேலதிக தொகையை வழங்க, தோட்ட முகாமைத்துவ நிறுவனங்களுக்கு, அரச வங்கிகள் மூலம் கடன் வசதி செய்து கொடுக்கப்படும். இந்த பொறுப்பு திறைசேரி ஆலோசகர் பாஸ்கரலிங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
4. வெகு விரைவில் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, புதிய தொகை சம்பளமும், 2015 மார்ச் 31ம் திகதியிலிருந்து கணக்கெடுக்கப்பட்டு நிலுவை சம்பளமும் வழங்கப்படும்.
5. கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை நடவடிக்கையை நேரடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்நடத்துவார்.
6. விரைவில் தொழிலாளருக்கு பயிர் காணிகள் பிரித்து வழங்கும் புதிய தொழில் முறைமையான,வெளி ஒப்பந்த முறைமை பற்றிய பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்துக்கும், அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட முகாமை நிறுவனங்களுக்கும் இடையில் ஆரம்பிக்கப்படும்.