க.கிஷாந்தன்-
கினிகத்தேனை நகரில் பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
அட்டன் கண்டி பிரதான வீதியின் கினிகத்தேனை நகரின் முதலாவது பிரதான வீதியே 26.05.2016 மாலை 7.30 முதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு தினங்களாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திற்கும் கினிகத்தேனை நகர மத்திய பஸ்தரிப்பிடத்திற்கும் இடையிலான நகரின் பிரதான வீதியில் பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் கினிகத்தேனை பொலிஸாரினால் கட்டிட ஆராய்ச்சி திணைக்களத்திற்கு அறிவித்ததையடுத்து வெடிப்பு ஏற்பட்ட இடத்தை 26.05.2016 மாலை பார்வையிட்ட அதிகாரிகள் குறித்த வீதியினை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
வீதியில் ஏற்பட்டுள்ள வெடிப்பு அனர்த்ததிற்குள்ளாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் மேலதிக நில ஆய்வு பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கினிகத்தேனை நகரின் முதலாவது பிரதான வீதி மூடப்பட்டுள்ளபோதும் நகரின் இரண்டாவது பிரதான வீதியினூடாக கினிகத்தேனை பஸ் தரிப்பிட வழியாக நாவலப்பிட்டி மற்றும் கண்டிக்கான போக்குவரத்து நடைபெறுவதாகவும் கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்தோடு இப்பகுதியில் உள்ள சில கடைகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.



