அஹமட் இர்சாட்-
இடம்பெயரந்தவர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடத்திற்கு உரிய முறையில் மீழ குடியமர்த்தும்வரை எமது மனிதநேயப்பணி தொடரவேண்டும் ஏற்கனவே களத்தில் இருப்பவர்களுடன் இன்னும் அதிகமானவர்கள் இதற்காக கை கோர்க்கவேண்டும் என கிழக்கு மகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தம் காரணமாக பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்விடங்களை இழந்து, இடம்பெயர்ந்து மிகவும் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் மனிதநேயம் படைத்த இஸ்லாமிய அமைப்புக்களும், இயக்கங்களும், தன்னார்வதொண்டு நிறுவனங்களும் இன்னும் பல சமூக சேவை அமைப்புக்களும் இறைவனின் உதவியுடன் களத்தில் நின்று பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் குறிப்பாக மேல், மத்திய மாகாணங்கள் என்று இன்னும் இது போன்ற பிரதேசங்கள் வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளன. இவ்அனர்த்தங்களினால் அதிகமான உயிரிழப்புக்களும், சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளதோடு மக்கள் தமது வீடுகளிருந்து வெளியேறி முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் வாழ்கின்றனர்.
தற்போது வழங்கப்பட்டு கொண்டிருக்கும் உதவிகளை விடவும், வெள்ள நீர் வடிந்த பிற்பாடு அம்மக்கள் தமது வீடுகளுக்கு மீண்டும் சென்று வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான தேவைப்பாடுகள் இருக்கின்றது. ஏனெனில் அவர்கள் தமது வீடுகளுக்கு மீளசெல்லும்போது அவர்களுடைய அத்தியாவசிய மற்றும் அன்றாட பாவனைப் பொருட்கள்அற்ற நிலையில் செல்லவேண்டிய ஓர் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது எனவே வெள்ள நீர் வடிந்த பின்பு அவர்களை மீண்டும் அவர்களது வீடுகளுக்கு குடியமர்த்துவதற்கான செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள் திட்டங்கள் குறித்து இப்பொழுதிருந்தே நாம் ஆராய வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
பாதிப்புற்ற மக்களினுடைய வீடுகள், வீதிகள் மற்றும் சுற்றுச் சூழல் என்பன மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. அதனை துப்பரவு செய்யும் பணிகள் அரசாங்கத்தினூடாக முன்னெடுக்கப்பட்டாலும் கூட நாங்களும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவற்றை துரிதப்படுத்த வேண்டடிய தேவைப்பாடு இருக்கின்றது. எனவே அதற்கான ஓர் தொண்டர் படையணியினை தயார்படுத்த வேண்டும்.
நிவாரண பொருட்களாக மக்களுக்கு உணவு, பாய், தலையணைகள், உடைகள் சுகாதார பொருட்கள் (sanitary items) போன்றன வழங்கப்படுகின்றன. இருப்பினும் அவர்கள் மீண்டும் அவர்களுடைய வீடுகளுக்கு திரும்புகின்ற போது அவர்களுக்கான வீட்டு தளர்பாடங்கள், சமையல் உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள், ஆடைகள் போன்ற பல்வேறு பொருட்களை வழங்க வேண்டிய தேவைபாடு காணப்படுகின்றது.
எனவே அவ்வாறான உதவிகளை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து சேகரித்து வழங்க வேண்டும். மேலும் அக்குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களுடைய அப்பியாச கொப்பிகள், புத்தகங்கள், சீருடைகள் மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் அனைத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்ற போது அவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமாயின் அரசாங்கம் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்வது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக அரசாங்கம் மாணவர்காளுக்கான தைத்த சீருடைகளையோ அல்லது சீருடை துணிகளை வழங்கி அதனை தைப்பதற்கான தையல் செலவுகள் அனைத்தையும் மிக விரைவாக அரசு பொறுப்பெடுத்து வழங்க வேண்டும் அதுமாத்திரமல்லாது தேவையான கற்றல் உபகறணங்களையும் உடனடியாக இப்போதிருந்தே பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு வளங்குவதற்காக தயார்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
விசேடமாக பாதிக்கப்பட்ட மக்களில் முஸ்லிம் மக்கள் அவர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் புனித ரமழான் மாதத்தை அனுஷ்டிக்க உள்ளார்கள். எனவே அவர்களுக்கான உலர் உணவு மற்றும் பல்வேறு விஷேட தேவைகள் காணப்படுகின்றன. அவற்றை நாம் தயார் செய்து கொடுக்க வேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்ட மக்களில் அதிகமானவர்கள் அன்றாடம் கூலித்தொழில் செய்து மிகவும் வறுமைக்கு மத்தியிலே தங்களுடைய வாழ்கையை கொண்டு செல்கின்றவர்கள்.
எனேவ அவர்கள் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது மிகவும் கஷ்டமான விடயம். எனவே எதிர்வரும் ரமழான் நோன்பு காலங்களிலும் அதனைத் தொடர்ந்து வருகின்ற பெருநாள் காலங்களிலும் அவர்களுக்கான உணவு புத்தாடைகள் போன்ற பல்வேறு தேவைகளை நிறைவு செய்து கொடுக்க வேண்டியுள்ளது.
ஆகவே பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு தற்போது உடனடி தீர்வுகளை வழங்குவதோடு மாத்திரம் நின்று விடாமல் அனர்த்தத்தின் பின் உள்ள காலப்பகுதியிலும் அவர்களுக்கு பல்வேறு மனிதாபிமான உதவிகளை வழங்கி பாதிப்பிலிருந்து அவர்களை முற்றாக மீட்டெடுத்து அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்குரிய சிறந்த திட்டமொன்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
மேலும் அவர்களுக்கான உதவிகளை பெறுகின்ற போது எந்த வகையாக உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தி அவ்வாறான உதவிப்பொருட்களை சேகரிக்க வேண்டும். நிதியுதவிகளை அதிகமாக சேகரிப்பது மிகவும் பிரயோசனமாக அமையும். அவ்வாறு போதியளவு பண ரீதியான உதவிகளை சேகரிப்பதநூடாக அவர்களுக்கு உதவி தேவைப்படும் விதத்தில் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்து பொருளாதார ரீதியாகவும் அவர்களை முன்கொண்டுவர முடியும்.
அத்துடன் இந்த அனர்த்த மீட்பு பணிகளிலும் சரி நிவாரண பணிகளிலும் சரி சமய நிறுவனங்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் மற்றும் சமூக நிறுவனங்களும் பாரிய சேவையினை வழங்கி கொண்டிருப்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது, இவ்வாறான பணிகளில் அரசினுடைய பணி மிகவும் மந்தகதியான நிலையில் இருப்பதனை காணக்கூடியத இருக்கின்றது இது மிகவும் கவலைக்குரியது.
எனவே இந் நல்லாட்சி அரசாங்கமானது மிகவும் விரைவாக அம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீள்வதற்குரிய அணைத்து திட்டங்களையும் வகுத்து அதனை செயற்படுத்த வேண்டும் என்று அரசினை வேண்டி கொள்கின்றேன்.
