பி. முஹாஜிரீன்-
'ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்குதாரர்களாக விளங்குபவர்கள் மாணவத் தலைவர்களாகும். அவ்வாறான மாணவத் தலைவர்கள் பாடசாலைக் காலத்தில் உற்சாகத்துடனும் திறமையாகவும் தொழிற்படுகின்றபோது அப்பாடசாலை பெயர் சொல்லும் பாடசாலையாக விளங்கும்'; என பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தெரிவித்தார்.
பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல் நிகழ்வு இன்று (29) செவ்வாய்க்கிழமை பாடசாலையில் நடைபெற்றது. இதில் தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'மாணவத் தலைவர்கள் எதிர்காலத்தில் சமூகத் தலைவர்களாக வரக்கூடியவர்கள். இவர்கள் ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதுடன் பாடசாலை வளங்களைப் பாதுகாத்து கற்றல் செயற்பாடுகளிலே கூடுதலான ஈடுபாடுடையவர்களாக திகழ வேண்டும்.
பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதன் மூலம் அர்ப்பணிப்புள்ளவர்களாக பணியாற்றுகின்றபோது பாடசாலை சமூகம் மட்டுமல்ல எல்லாத் தரப்பினரும் எமது செயற்பாடுகளை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வார்கள். நம்மீது நம்பிக்கை வைத்து பொறுப்புக்களை வழங்குவார்கள். மாணவர்களுடைய ஆளுமையை விருத்தி செய்கின்ற விடயத்தில் மாணவத் தலைவர் பதவியானது பெரும் பங்கு வகிக்கின்றது. இதற்கமைய நமது நேரங்களையும் திறமையையும் இப்பாடசாலையின் முன்னேற்றத்திற்காக செலவிடக் கூடியவர்களாக நாம் மாற வேண்டும்' என்றார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்களான பி. முஹாஜிரீன், ஐ.எல்.எம்.பாயிஸ், எம்.எஸ். முபீன் ஓ.எல்.எம். முபாறக் மௌலவி உட்பட மாணவத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.





