காரைதீவு நிருபர்-
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக உப்புக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு பக்கட் உப்பின் விலை 60ருபா முதல் 80ரூபா வரை சென்றுள்ளது. அதற்கும் உப்பில்லாத நிலை தோன்றியுள்ளது.
வர்தத்கர் கோடீஸ்வரன் தகவல் தருகையில்:
உப்புபக்கட்டில் 40ருபா என இடப்பட்டிருக்கிறது. ஆனால் எமக்கே 50ருபாவுக்கு தருகிறார்கள் அதுவும் வழமையைவிடக்குறைவாக. அதனை விற்பனை செய்கையில் பாவனையாளர்கள் அடித்தவிலையை விட கூட ஏன் எடுக்கிறீர்களென கேட்கிறார்கள். அதனால் உப்பு விற்பனை என்பது அண்மைக்காலமாக பிரச்சினையாகவுள்ளது.
சில கடைகளில் உப்பு மருந்திற்குக்கூட இல்லாத நிலை காணப்படுகிறது.
அம்பாந்தோட்டை உப்பளத்தில் உப்புற்பத்தி குறைந்ததே இதற்கு காரணமென நம்பப்படுகிறது. இவ்வாரம் உற்பத்தி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் தட்டுப்பாடு இருக்காது என நம்பப்படுகிறது.
வெற்றிலையின் விலையும் உச்சத்தில்..
கிழக்கில் வெற்றிலையின் விலையும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. சாதாரணமாக 1பகழி நீர்வெற்றிலை 40ருபாவுக்கு விற்கப்பட்டுவந்தது. தற்சமயம் அவ்விலை 150ருபா வரை உயர்ந்துள்ளது.
பொதுவாக களுதாவளைப்பகுதியிலிருந்தே நீர்வெற்றிலை சந்தைக்கு வருவதுண்டு. அங்கு உற்பத்தியும் சீராகவே உள்ளது.
அண்மைக்காலமாக கல்முனைக்கு வரும் நீர்வெற்றிலைகளில் பெரும்பாலானவற்றை தெற்கிலிருந்துவரும் பெரும்பான்மையின வர்த்தகர்கள் கொள்வனவுசெய்து கொண்டுசெல்வதால் நீர்வெற்றிலைக்கு மௌசு ஏற்பட்டுள்ளதாக உள்ளுர் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
