சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள 250 குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இலவசமாக வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தலைமையில் நேற்று முன்தினம் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சவூதி அரேபிய சலாபுல் ஹைர் நிறுவனப் பணிப்பாளர் அஷ்சேஷ். காலித் பின் அத் தாவூத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் சவூதி அரேபிய சலாபுல் ஹைர் நிறுவன இயக்குனர்களான அஷ்சேஷ். ஜும்மான் அலி ஸஹ்ராணி, அஷ்சேஷ். காலித் பின் நாஸீர் அஷ்ஷஹ்ரி, அஷ்சேஷ். ஆஸ்சேஷ்.அப்துர் றகுமான் சேகா, அம்பாரை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி, எம்.எல்.எச்.பஸீர் மௌலவி, பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் பிரத்தியேகச் செயலாளர்களான சட்டத்தரணி. எம்.எம்.சஃபீர், யூ.எல்.பஸீர், தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை உயரதிகாரிகள் உள்ளிட்ட ஊர்ப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.
வழங்கப்பட்ட 250 குடும்பங்களுக்குமான குழாய் மூலக் குடிநீருக்கான செலவுத் தொகை ரூபாய் 40 இலட்சமும் சவூதி அரேபிய சலாபுல் ஹைர் சர்வதேச சமூக சேவை நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் இங்கு பேசுகையில்:
'ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கிடைக்கின்ற நிதி ஒதுக்கீடுகளைக் கொண்டு, இப்பிரதேச மக்கள் அனைவரது தேவைகளையும் நிறைவேற்றிவிட முடியாது. அதற்கப்பால் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவ்வாறான சமூகசேவை அமைப்புக்களின், நல்லுள்ளம் கொண்டவர்களின் உறவுகளைப் பயன்படுத்தி சமூகத்தின் பல தேவைகளை நிறைவேற்றி வருகிறோம்.
இன்று வழங்கப்படும் இக்குடிநீர் இணைப்பும் அவ்வாறே வழங்கப்படுகின்றது. இவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை புரியுங்கள்' எனக் கேட்டுக் கொண்டார்.
தகவல் - ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்.
படங்கள் - மூத்த போராளி.