பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் கடந்த சில மாதங்களாக தொடராக இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை காத்தான்குடி பொலிசார் 16 நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் மூன்று பேரையும் காத்தான்குடி பொலிசார் காத்தான்குடி டெலிகோம் வீதி,மற்றும் ஆரையம்பதி கர்பலா மொடன் பாம் வீதிகளில் வைத்து கைது செய்துள்ளதுடன் ,கொள்ளையிடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பொருட்களில் 1 மோட்டார் சைக்கிள்,துவிச்சக்கர வண்டி, கையடக்க தொலைபேசிகள்; ,தங்க நகைகள் போன்றவை இதில் அடங்கும்.
மேற்படி கொள்ளை சம்பவத்தில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 9 வீடுகளில் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை காத்தான்குடி பொலிசார் மீட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.உபாலி ஜெயசிங்கவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு பிராந்தியம் ஒன்றிக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி எஸ்.பி. ரத்நாயக்காவின் ஆலோசனையில் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெதர தலைமையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய உதவிப் பொறுப்பதிகாரி தெய்யாகல உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பொலிஸ் குழுவினரின் உதவியுடன் இக் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தெரிவித்தார்.



