தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இந்த ஆரம்ப கட்ட கலந்துரையாடலில் சட்டத்தரணி YLS ஹமீட்,பொறியியலாளர் MM. அப்துர்ரஹ்மான் அஷ்ஷெய்க் நஜா முஹம்மட் மற்றும் சட்டத்தரணிகளானமுஹம்மட் இம்தியாஸ், அய்யூப் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தற்பொழுது தொடங்கப்பட்டுள்ள யாப்பு திருத்த நடைமுறையானது, கடந்த கால யாப்புத் திருத்தங்களைப் போலல்லாது இலங்கையின் அரசியல் சாசனத்தில் பரவலான மாற்றங்களை உட்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த யாப்புத் திருத்தங்கள், குறிப்பாக முஸ்லிம்களைப் பொறுத்த வரையிலும் ஏனைய சிறுபான்மை மக்களைப் பொறுத்த வரையிலும் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மற்றும் எதிர்கால சமூகவியல் நோக்கிலும் எவ்வாறான விளைவுகளையும் தாக்கங்களையும் உருவாக்கும் என்பது பற்றி இங்கு முதற்கட்டமாக கலந்துரையாடப்பட்டது.
சட்டத்தரணி YLS. ஹமீட் , இந்த விடயங்களை முஸ்லிம் சமூகம் எவ்வாறு நுணுக்கமாக நோக்க வேண்டும் எனும் கருத்துக்களை விரிவாக முன்வைத்தார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியத்துவமிக்க யாப்புத்திருத்தமாக அமையப் போகின்ற இவ்விடயம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் கவனம் போதுமான அளவு குவிக்கப்படவில்லை என்பதனால் சமூகத்தின் பலதரப்பட்ட மட்டங்களிலும் இதுபற்றிய கவனயீர்ப்பை மேற்கொண்டு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களை மேற்கொள்வது பற்றியும் ஆராயப்பட்டது.
அந்த வகையில் எதிர்வரும் நாட்களில் முஸ்லிம் சட்டத்தரணிகள், சிவில் சமூக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுடனுமான கலந்துரையாடல்களை நடாத்தி அவர்களின் ஆலோசனைகளோடும் ஒத்துழைப்போடும் தொடர்ச்சியான விழிப்பணர்வுத் திட்டங்களை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.



