ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவை பொதுபல சேனா அமைப்பு சந்தித்தது அறிந்ததே, இந்த சந்திப்பு கிடைத்த உயர்மட்ட அரசியல் தகவல்களின்படி பொதுபல சேனா அமைப்பு ஜனாதியை சந்திக்க வாய்ப்பு வழங்கும் படி முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பு இரண்டு முக்கிய விடயங்களை முன்னிறுத்தி கலந்துரையாடியுள்ளனர்.
தன்னை பொதுபல சேனா விமர்சிப்பது தொடர்பாக ஜனாதிபதி விசனம் வெளியிட்டுள்ளதை தொடர்ந்து கொள்கை அளவில் மட்டுமே பொது பல சேனா யாரையும் விமர்சிக்கும் எனவும் தனிப்பட்ட ரீதியில் தங்களுடன் எதுவித கோபமும் இல்லை என பொதுபல சேனா தரப்பால் ஜனாதிபதிக்கு விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கும் பொதுபல சேனா அமைப்புக்கும் எதுவித தொடர்பும் இல்லை என பொதுபல சேனா அமைப்பினர் குறிப்பிட்டுள்ள பொது பல சேனாவினர் தங்களது அமைப்பு கொள்கை அளவில் மட்டுமே பிரசாரங்களை முன்னெடுப்பதாகவும் எந்த சந்தர்பங்களிலும் தாங்கள் வன்முறையை தூண்டவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழர்களோ முஸ்லீம்களோ கிரிஸ்தவர்களோ அவர்களின் உரிமைகள் தொடர்பாக பேசினால் அதனை அவர்களது உரிமையாக கருதும் இந்த நாட்டில் சிங்களவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் எங்களை இனவாதிகளாக சித்தரிப்பது ஞாயமற்றது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் சிறுபான்மை மக்கள் நாட்டை பல கோணங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஜனாதிபதியிடம் பொதுபல சேனா பட்டியலிட்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் தமது அமைப்பை பொதுவில் விமர்சிப்பதை விடுத்து கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்து, குற்றச்சாட்டுக்களை தங்களுடன் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர்.
