இலங்கையில் மாடுகள் அறுப்பது முற்றாக இல்லாமற் செய்யப்பட வேண்டுமென்ற ஜனாதிபதியின் கருத்து வரவேற்கத்தக்கது. ஆனால் ஜனாதிபதியினால் இதனைச் செய்ய முடியாது.
அவருடன் இருக்கும் அமைச்சர் ஹக்கீம் போன்றவர்கள் இதற்கு இடமளிக்க மாட்டார்கள் என ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மாடுகள் அறுப்பது தடைசெய்யப்படுவது மாத்திரமல்ல வெளிநாடுகளிலிருந்து இறைச்சி இறக்குமதியும் தடை செய்யப்பட வேண்டும் என்பதே ராவணா பலயவின் நிலைப்பாடாகும் என்றும் கூறினார்.
நாட்டில் மாடுகள் அறுப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் ராவணா பலயவின் நிலைப்பாட்டினை விளக்குகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் மாடுகள் அறுப்பது தடை செய்யப்பட வேண்டுமென தொடர்ந்து பல வருடங்களாக ராவணா பலய வலியுறுத்தி வருகிறது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் மாடறுப்பதற்கு எதிராக நாம் மகஜர் ஒன்றினையும் சமர்ப்பித்தோம். மகஜரில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டிருந்தனர்.
எதிர்ப்பு ஊர்வலங்களையும் நடத்தினோம். ஆனால் மஹிந்த ராஜபக் ஷ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்திலும் ஹக்கீம் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் மஹிந்த ராஜபக் ஷ எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த வாரம் பயாகலையில் நடைபெற்ற இந்துக்களின் பொங்கல் விழாவிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறான கருத்தினை வெளியிட்டுள்ளார். மாடுகளை இந்துக்கள் தெய்வமாக வணங்குகிறார்கள்.
அதனால் இந்து மக்களின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
உண்மையில் அவர் மாடுகள் அறுப்பதை தடைசெய்யப்போவதில்லை.
ஜனாதிபதி மாடுகள் அறுப்பதை நிறுத்த வேண்டுமெனத் தீர்மானித்தால் பொலிஸ்மா அதிபர் மூலம் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றுநிருபம் மூலம் அறிவித்து உடனடியாகத் தடைசெய்யலாம். தடையுத்தரவினை பொலிஸார் அமுல்படுத்துவார்கள்.
இதைவிடுத்து வெறுமனே கூட்டங்களில் அல்லது விழாக்களில் கருத்து தெரிவிப்பதன் மூலம் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. இந்துக்கள் மாடுகளை தெய்வமாக வணங்குகிறார்கள். பௌத்தர்கள் மாடுகளை ‘கிரி அம்மா’ வாக பராமரிக்கிறார்கள்.
அதனால் மாடுகள் அறுப்பது தடைசெய்யப்பட வேண்டும். அதனுடன் சேர்த்து மாட்டிறைச்சி இறக்குமதியும் தடைசெய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ராவணா பலய இருக்கிறது என்றார்.
