எப்.முபாரக்-
பட்டதாரிப் பயிலுநர்களாக நியமனம் வழங்கப்பட்டு கொழும்பு உட்பட கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் நியமிக்கப்பட்டவர்களை மீள கிழக்கு மாகாணத்திலேயே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று புதன்கிழமை (20) தெரிவித்தார்.
கடந்த 12ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிலுநர் நியமனங்களில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகமானவர்களுக்கு கொழும்பு உட்பட வேறு மாகாணங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
பத்தாயிரம் ரூபாய் மாதாந்த வேதனத்தில் ஒரு வருடத்துக்கு பயிலுநர்களாக கடமையாற்ற வேண்டும் என்றும் பணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் நியமனம் பெற்றவர்களை கிழக்கு மாகாணத்துக்குள் உள்வாங்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களினால் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த முதலமைச்சர்,
கிழக்கு மாகாணத்துக்கு வெளியே அதிகமான பட்டதாரிகள் பயிலுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விபரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு பணித்துள்ளேன்.
இவ்வாறு கொழும்பு போன்ற கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை கிழக்கு மாகாணத்துக்குள் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என்றார்.