முஸ்லிம் பெண்களின் விவாக நடவடிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்காக இந்நாட்டில் 65 காஸி நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. ஆனால், பௌத்த நாடு என மார்தட்டிக் கொள்ளும் இந்த நாட்டில் பௌத்த மத பிக்குகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு நீதிமன்றம் இல்லாதுள்ளது என பொதுபல சேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
தனியார் சிங்கள வானொலி அலைவரிசையில் இரவு 7.30 மணிக்கு இடம்பெறும் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.
இந்நாட்டிலுள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றங்கள் ஒவ்வொன்றிலும் சீரழிந்து திரிகின்றனர். இந்த நாட்டில் பௌத்தர்களுக்கு பிரச்சினையுள்ளது. இந்த நாட்டிலுள்ள பௌத்தர்களுக்கு சட்டம் கொண்டுவர முன்னர், அவர்களின் இருப்பைப் பாதுகாக்க வேண்டும்.
வீடு இல்லாதிருக்கும் போது சாமான் வாங்க முயற்சி செய்வது போன்ற செயலே இந்த அரசாங்கத்தின் நடவடிக்கை.
உலகில் 2500 வருடங்கள் அழியாது பாதுகாக்கப்பட்டு வரும் ஒரே மதம் இந்த பௌத்தம். உலகில் சிறுபான்மையாக உள்ள சமூகமே நாம். எம்மை இந்த நாட்டில் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாராளுமன்றத்திலுள்ள கிறிஸ்தவ அமைச்சர் ஒருவரின் பெயரில் இந்த நாட்டில் 400 அடிப்படைவாத தேவாலயங்கள் உள்ளன எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.
