புலம் பெயர் தொழிலாளர்கள் அரசியல் மயப்படுத்தப்படாமையே அவர்களுடைய பலவீனமாகும் - றக்கீப் ஜௌபர்

எம்.வை.அமீர்-
புலம்பெயர் தொழிலாளர்களும் உறவுகளும் கூட்டாக ஒன்றிணைந்து தனது உரிமைகளைப் பாதுகாக்க முன்வரும் போதுதான் அது ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் புள்ளியாக மாற்றமடையும். ஜனநாயக முறையில் அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் புள்ளியாக நாம் மாறும் போதே ஆட்சியாளர்கள் எமது பிரச்சினைகளுக்கும் முன்னுரிமைகொடுப்பர்.

புலம் பெயர் தொழிலாளர்கள் இதுவரை காலமும் அரசியல் மயப்படுத்தப் படாமையே அவர்களுடைய பலவீனமாகும். 

1990 ஐ,நா பிரேரணையில் உள்ளடக்கப் பட்ட சுமார் 90இற்கும் அதிகமான உரிமைகள் இன்னும் நடைமுறைப் படுத்தப் படாமல் தேங்கி நிற்கின்றன. 

இதில் வாக்களிப்பு வசதி என்பது ஒரு பிரதான கருவியாகும். எமக்கு வாக்குரிமை இல்லாததன் விளைவு இதனை நடைமுறை படுத்துவதில் கூட தொடர்ந்தும் இழுபறி தொடர்கின்றது.

ஆட்சியாளர்களையும், அரசதிகாரிகளையும் சந்திப்பதிலும், மகஜர் கொடுப்பதிலும், கூடவே இருந்து புகைப்படம் எடுப்பதிலும், எந்த ஒரு ஆக்க பூர்வமான பயனையும் ஒரு போதும் நாம் அடையப் போவதில்லை. கடந்த 18ஆம் திகதி சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமான அன்று எத்தனை அரசியல்வாதிகள் எமது மக்களுக்காக ஊடகங்களுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பி இருந்தார்கள்?

வரவு செலவுத்திட்டத்தில் எமக்காக அறிவிக்கப்பட்ட சலுகைகள் என்ன? கடந்த மார்ச் மாதம் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டு 100 நாள் வேலை திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஓய்வூதியத் திட்டம் எங்கே போனது?

மொத்தமாக இவர்களுடைய கடைக்கண் பார்வையில் கூட நாம் சிக்கவில்லை என்பதே உண்மை. அரசியல் லாபங்களுக்காக ஆங்காங்கே சில உதவிகளைச் செய்துவிட்டு அறிக்கைகள் மூலம் பிரபலம் தேடுகின்றனர். எமது உரிமைகளைக்கூட உதவிகளாகவும் சலுகைகளாகவுமே பார்க்கின்றனர். மத்திய கிழக்கிலுள்ள எமது தூதரகங்கள் கூட, நாட்டிற்காக நிதி முதலீடுகளை திரட்டும் ஒரு முகவர் ஸ்தாபனமாகவே பெரும்பாலும் இயங்குகிறது. 

இதை விடுத்து எமது லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கும் சமூக நலனுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வினைத்திறன் அற்ற தாமதமான செயற்பாடுகளாலும், காலம் கடந்த சட்ட உதவிகளாலும் உயிர்களையே பணயம் வைக்கின்றோம். 

எனவே புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பான தேசிய கொள்கையையும் அடிப்படையையும் மாற்றும் பொறுப்பு இறுதியாக புலம்பெயர் தொழிலாளர்களின் கைகளிலேயே உள்ளது. எமது ஒற்றுமையின் அவசியத்தை புலம்பெயர் தொழிலாளர்களும் உறவுகளும் தானாக உணர்ந்து, ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒருமித்த மக்கள் சக்தியாக உருவாகி, அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் புள்ளியாக அல்லது ஒரு பேரம் பேசும் சக்தியாக மாறாதவரை எம்மால் எதையும் சாதிக்க முடியாது. எமது ஒற்றுமையே காலத்தின் தேவை.

என புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் இலங்கை புலம் பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் ஏற்பாட்டாளர் றக்கீப் ஜௌபர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -