கல்முனை புதிய நகரத் திட்டத்தில் தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறுவோம் - வை.எல்.எஸ்.ஹமீட்

எஸ்.அஷ்ரப்கான்-
றைந்த தலைவர் கனவு கண்ட புதிய கல்முனை நகரம், 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில்விக்ரமசிங்கவினால் வாக்குறுதியளிக்கப்பட்டு மீண்டும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில்விக்ரமசிங்கவினால் அவ்வாக்குறுதி புதுப்பிக்கப்பட்டு, இன்று அது செயலுருப் பெறுவதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்ற நிலையில், தமிழ்தரப்பினர் குறிப்பாக ரெலோ அமைப்பு தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழர் மகா சபைபோன்ற அமைப்புக்கள் இணைந்து இதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருப்பதும் அதனை பாரதுரமாக எதிர்ப்பதும் ஆச்சரியப்பட்க் கூடிய ஒருவிடயமல்ல. 

வட கிழக்கின் மொத்த முஸ்லிம்சமூதாயம் தொடர்பாக தமிழ் தரப்பினரின் மனோநிலையை எடுத்துக் காட்டுகின்ற மற்றொரு நிகழ்வு மட்டுமே இதுவாகும்.

அன்று மறைந்த தலைவர் இந்த புதிய நகரத்திட்டத்தைக் கொண்டுவந்த பொழுதும் இதனை எதிர்த்தார்கள். இங்கு அவர்கள் மூன்று பிரதான விடயங்களை சுட்டிக் காட்டுகின்றார்கள். 

ஒன்று,
உத்தேச புதிய நகரத்திற்காக சுவீகரிக்கப்பட இருக்கும் காணிகளில் கணிசமான அளவு காணிகள் தமிழர்களுக்கு உரியதாகும். 

இரண்டாவது, 
கல்முனையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். எனவே புதிய நகரத் திட்டம் சனத்தொகை விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். 

3 வது 
கல்முனை ஒரு வியாபார கேந்திரநிலையமாக மாறும் என்பனவாகும்.

முதலாவது காணி தொடர்பான விடயத்தை பொறுத்தவரையில் கல்முனை புதிய நகரத்திற்காக மறைந்த தலைவரின் காலத்திலிருந்து பெறுவதற்கு உத்தேசிக்கப்பட்ட காணிகள் கடந்த பலஆண்டுகளாக நெற்செய்கை பண்ணப்படுவதில்லை. எதுவித பிரயோசனமுமற்று தரிசாக கிடக்கின்ற காணிகளை மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு பெற்றுக் கொள்வதென்பது ஒரு நியாயமான விடயமாகும். 

உரிமையாளர்கள் அந்தக்காணிகளுக்குரிய நியாயமான நஷ்டஈட்டைக்கோரலாம். அதில் ஏதும் பிரச்சினைகள் இருப்பின் அதுதொடர்பாக தங்களது எதிர்ப்பைக் காட்டலாம். மாறாக இந்தக் காணிகள் எங்களுக்குச்சொந்தமானது, இதனால் எங்களுக்கும் பிரயோசனமில்லை. பொதுத்தேவைகளுக்கு பிரயோசனப் படுத்துவதற்கு அரசையும் அனுமதிக்கமாட்டோம், என்பது வரட்டு வாதமாகும். 

இரண்டாவது கல்முனையில் தமிழர்களின் இன விகிதாசாரத்தில் மாற்றம் வரும் என்பதாகும். புதிய நகரம் இனிமேல்தான் உருவாக்கப்பட இருக்கின்றது. எனவே இதுவரையில் உருவாகாத அந்த நகரத்தில் தமிழாகளின் விகிதாசாரமும் பூச்சியமாகும். முஸ்லிம்களின் வகிதாசாரமும் பூச்சியமாகும். எனவேபூச்சியமான விகிதாசாரத்தில் எவ்வாறு விகிதாசாரமாற்றம் ஏற்படும். 

இன்னும் கூறப்போனால் உருவாக இருக்கின்ற புதிய நகரத்திற்காக அடையாளம் காணப்பட்ட எல்லைக்குள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் கல்முனைக்குடியில் இருந்து ஏற்கனவே சுனாமியின் பின்னர் குடியேறிய பல நுறு முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றன. 

அந்தவகையில் பார்த்தால் புதிய நகரத்தில் தமிழர்களின் பிரசன்னம் பூச்சியமாக இருக்கின்ற வேளை குடியேறிய முஸ்லிம் குடும்பங்கள் 100 வீதம் என்று கூற வேண்டும். எனவே அங்கும் தமிழர்களின் விகிதாசார மாற்றம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. 

ஆனால் தமிழ் தரப்பினர் விகிதாசார மாற்றம் என்று கூறுவது கல்முனை நகரத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமான கல்முனைக்குடி என்று அடையாளம் காணப்படுகின்ற பகுதியை கழித்து வருகின்ற எஞ்சிய பகுதிக்கு எதிரே இருக்கின்ற காணிகள் மூடப்பட்டு அங்கு முஸ்லிம்கள் குடியேற்றப்படுவார்களேயானால் தங்களுடைய விகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படும் என்பதாகும்.

மறுவார்த்தையில் கூறுவதானால் குறித்த கல்முனையின் எஞ்சிய பகுதிக்கு நேரே ஒரு நகரம் உருவாக்கப்பட்டால் அந்த நகரத்தில் குடியேற்றப்படுகின்றவர்களும் தற்போது மக்கள் வாழும்குறித்த கல்முனை பகுதியின் கிழக்குப் பக்கத்தில்வாழுகின்ற மக்களின் எண்ணிக்கையோடு கூட்டப்பட்டு விகிதாசாரம் புதிதாக கணக்கிலிடப்பட்டால் தங்களது விகிதாசாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அடிப்படையில் இந்த வாதம் முன்வைக்கப்படுகின்றது. 

இதற்கான முதலாவது பதில் நகரமே புதிதாக உருவாக இருக்கின்ற பொழுது அதில் குடியேற்றப்படுபவர்களின் எண்ணிக்கையையும் பழைய நகரத்தில் வாழுகின்றவர்களின் எண்ணிக்கையையும் கட்டாயம் கூட்டப்பட வேண்டும், என்கின்ற விதிகள் ஏதாவது இருக்கின்றதா ? ஏன் அதற்கு புதிய பெயரை வைத்து அதனை ஒரு புதிய நகராகவே பார்க்கமுடியாதா என்பதாகும். 

இரண்டாவது பதில் கல்முனையின் தென் பகுதி எல்லை கல்முனை மஹ்மூத் பாலிகா மகா வித்தியாலய வீதி என்பதாகும் என்பதுதான் உண்மையாகும். ஏனெனில் கல்முனை பட்டின சபையாக இருந்த பொழுது கல்முனை 7 ஆம்வட்டாரத்து எல்லை மஹ்மூத் பாலிகா மகாவித்தியாலய வீதியாகும். எனவே கல்முனையில் பெரும்பான்மை சமூகம் தமிழ் தரப்பினர் கூறுவதுபோல் தமிழர்களல்ல. மாறாக முஸ்லிம்களாகும். எனவே அந்த கல்முனைப் பிரதேசத்திற்குள் வாழுகின்ற எந்த சமூகத்தைச்சேர்ந்தவர்கள் புதிய நகரத்தில் குடியேறினாலும் கல்முனையில் மொத்தக் குடிசன விகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படாது. 

வெளியிலிருந்து யாரையாவது கொண்டு வந்து குடியேற்றினால்தான் அந்த விகிதாசாரத்தில் தாக்கம் ஏற்படும். அவ்வாறான நோக்கம் அத்திட்டத்தில் இல்லை. அதற்கானஅவசியமுமில்லை.

ஆனால் கல்முனைக்குடியை கல்முனை நகரத்திலிருந்த வேறு பிரிக்கின்ற ஒரு பார்வை தமிழ் தரப்பினர்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்றது. ஆனால் கல்முனையில் ஒரு பாகமாக இருந்த குடியிருப்புக்களைத் தான் கல்முனைக் குடியிருப்பு என்று அன்று அழைத்தார்கள். அதனால்தான் கல்முனைக்குடியாக அடையாளப்படுத்தப்படுகின்ற அந்தப் பிரதேசம் முன்னாள் கல்முனை பட்டண சபையின் நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் வட்டாரங்களைக் கொணடிருந்தது. எனவே கல்முனை மாநகரின் பிரிக்க முடியாத இந்த நான்கு வட்டாரங்களையும் கல்முனை மாநகரத்திற்கு சொந்தமானவையல்ல என்று தங்கள் வசதிக்காக தமிழ் தரப்புக்கள் கூறுகின்றார்கள் என்பதற்காக அது யதார்த்தமாகி விடாது. 

சட்ட ரீதியாக கல்முனையின் அங்கமாக இருக்கின்ற பகுதிகள் என்றுமே கல்முனைதான். என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, கல்முனையின் பெரும்பான்மை முஸ்லிம்கள்தான் என்கின்ற உண்மையை செயற்கைக் காரணங்களைக் கொண்டு மாற்றிவிட முடியாது. என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மறுபுறத்தில் கல்முனைக்குடி கல்முனையுடன்தொடர்பற்ற வேறு ஒரு பிரதேசமாக இருந்திருந்தால் கல்முனைக்குடி என்ற வார்த்தையில் கல்முனை என்ற பதம் முன் இணைப்பாக வந்திருக்காது. மாறாக வேறுஒரு பெயர் வந்திருக்கும். ஆனால் கல்முனை என்றசொல்லுடன் குடி என்ற சொல்லை இணைத்ததனால் அது கல்முனையில் இருந்து வேறுபட்ட ஊர் என்று அவர்கள் வாதிடுவார்களானால் யாருமே வாழாத தரிசுநிலத்தை புதிய நகரமாக்குகின்ற பொழுது அதற்கு கல்முனையுடன் புதிய நகரம் என்று பெயரிட்டால் கல்முனை என்ற சொல்லுடன் இன்னும் ஒரு சொல் இணைக்கப்படுவதனால் அது இன்றிருக்கின்ற கல்முனையில் இருந்து வேறு படுத்திப் பார்க்கப்படவேண்டும். 

மாறாக புதிய நகரம் என்ற சொல் புதிய உருவாக்கத்தைத் தான் காட்டுகின்றதே தவிர கல்முனை என்ற பதத்தில் மாற்றம் கொண்டுவரவில்லை என்ற வாதம் முன் வைக்கப்படுமானால் அதே வாதம் கல்முனையின் ஒரு பகுதியில் குடியிருப்புக்கள் இருந்ததனால் “குடி” என்ற சொல் இணைக்கப்பட்டிருக்கின்றது. எனவே அது கல்முனை என்ற பதத்தில் தாக்கம் செலுத்தாது தன்னை வேறாக அடையாளம் காட்டுவதற்கு என்ற வாதத்தையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். 

அதேநேரம் புதிய நகரத்திற்கு கல்முனையுடன் சம்மந்தமில்லாத ஒரு புதிய பெயைரைச் சூட்டினால் புதிய நகரம் கல்முனையுடன் சம்மந்தப்பட்டது அல்ல என்று தமிழ் தரப்பினர் ஏற்றுக் கொள்வார்களா ? என்பதை தமிழ் தரப்பினர் சிந்திக்க வேண்டும். எனவே தமிழ் தரப்பினர் வரட்டு வாதங்களை கைவிட வேண்டும். முன்னாள் கல்முனை பட்டின சபையில் சகலவிதமான சட்ட ரீதியான பதிவுகள் இருந்தும் குடி என்ற ஒரு சொல் இணைக்கப்பட்டதற்காக பெரும்பான்மை முஸ்லிம்களை வேறுபிரித்து கல்முனையில் தாங்கள் பெரும்பான்மையானவர்கள் என்று நிறுவ முற்படுகின்ற வரட்டு வாதத்தை கைவிட வேண்டும்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க தமிழர்கள் இன்று கல்முனை என்ற பதத்திற்குள் அடையாளப்படுத்துகின்ற பிரதேசத்தில் தமிழர்கள்அதிகம் வாழுகின்றார்கள் எனவே அதற்கு நேரே ஏற்படுத்தப்படுகின்ற குடியிருப்புக்கள் தங்களின் விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்ற வாத்த்தை அப்படியே எடுத்துக் கொண்டாலும் கல்முனையில் சின்னத்தம்பி வீதிவரை முஸ்லிம்களே பெரும்பான்மையாக வாழுகின்றார்கள். புதிய நகரத்திற்காக பெறப்பட உத்தேசிக்கப்படுகின்ற காணிகளின் பெரும்பகுதி இந்த சின்னத்தம்பி வீதியின் எல்லைக் கோட்டுக்குள்ளேயே உள்வாங்கப்படுகின்றது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவற்றிற்கு அப்பால் எழுப்பப்பட வேண்டிய அடுத்த கேள்வி முஸ்லிம் குடியிருப்புக்கள் ஏற்படுத்தப்படுவதனால் தமிழர்களின் விகிதாசாரம் பாதிக்கப்படும் எனபதற்கு இவர்கள் தாங்கள் குறித்துரைக்கின்ற அந்தக் காணிகள் தான் குடியிரப்புக்குப் பயன்படுத்தப்படும் என்று இவர்களுக்கு யார் கூறியது? குடியிரப்புக்கள் ஏற்படுத்தப்படுவதாக இருந்தால் கல்முனைக்குடியாக அடையாளம் காட்டப்படுகின்ற எல்லைக்கு நேரே இருக்கின்ற காணிகளில்தான் அது இடம்பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். 

ஏனெனில் தமிழ் தரப்பினர் குறிப்பிடுகின்ற காணிகள் கல்முனையின் பிரதானவர்த்தக பிரதேசத்தை அண்மியதாகும். எனவே அந்தக்காணிகளில் வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் அமைவதற்குத்தான் வாய்புக்கள் அதிகமாகும். மறைந்த தலைவரின் காலத்தில் அவ்வாறுதான் தாங்கள் அதனை திட்டமிட்டோம். இன்று அதிகாரத்தில் இருப்பவர்களும் பெரும்பாலும் அதைத்தான் பின்பற்றுவார்கள் என்று நினைக்கின்றேன். 

எனவே குறித்த காணிகளில் குடியேற்றம் செய்வதற்கே வாய்ப்பில்லை என்கின்ற பொழுது விகிதாசார மாற்றம் பற்றி தமிழ் தரப்பினர் முன்வைக்கும் வாதங்கள் எடுபடக் கூடியவையா? குறித்த காணிகளில் குடியேற்றம் இடம்பெறும் என்று ஒரு வாத்த்திற்கு வைத்துக் கொண்டாலும் தமிழர்கள் அவ்வாறு குடியேற்றம் நடைபெறுகின்ற பொழுது தங்களுக்கு நியாயமான பங்கு தரப்பட வேண்டும்என்று வாதிடலாமே தவிர புதிய நகரமே உருவாகக்கூடாது என்று போராடுவது எந்த விதத்தில் நியாயமானது ? 

இது வெறுமனே முஸ்லிம்கள் மீது தமிழ் தரப்பினர் கொண்டிருக்கின்ற காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக இல்லாமல் வேறு எதுவாக இருக்கலாம்.


அவர்களது மூன்றாவது காரணம் கல்முனையை ஒருவியாபார கேந்திர நிலையமாக மாற்றப்போகின்றார்கள் என்பதாகும். அதுஉண்மையான காரணமாகும். கல்முனையை ஒருவர்த்தக கேந்திர நிலையமாக மாற்றுவதில் என்ன தவறு இருக்கின்றது. வட கிழக்கில் மிகத் தொன்மைவாய்ந்த பிரபலமான வர்த்தக நகரம்தான் கல்முனை. அவ்வாறான ஒரு நகரத்தை மேலும் அபிவிருத்தி செய்து மிகச் சிறந்த வர்த்தக கேந்திர நிலையமாக மாற்ற முற்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயமா? அல்லது எதிர்க்கப்பட வேண்டிய விடயமா ?

இலங்கையில் மட்டுமல்ல உலத்திலேயே தாங்கள் வாழுகின்ற ஒரு நகரம் ஒரு சிறந்த வர்த்தக மையமாக மாற்றப்படுவதை எதிர்க்கின்ற ஒரு சம்பவம் கல்முனையில்தான் முதல் தடவையாக அரங்கேற்றப்படுகின்றது என்று நான்நினைக்கின்றேன்.

இது தமிழ் தரப்பினர் முஸ்லிம்கள் மீதுகொண்டிருக்கின்ற, தொடர்ச்சியாக காட்டி வருகின்ற இனக்குரோத்த்தின் மற்றுமொரு வெளிப்பாடு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மொத்த சிறுபான்மைக்கும் எதிரான பொதுபல சேனாவை தமிழ் தரப்பினர் கொண்டுவந்து முஸ்லிம்களுக்கு எதிராக இனக்குரோத அசிங்கம் அரங்கேறியதும் இந்தக்கல்முனையில்தான். இந்தக் கல்முனைத்தொகுதியையே ஆண்ட ஒரு முது பெரும் அரசியல்வாதி எம்.எஸ். காரியப்பரின் பெயரைச்சூட்டுகின்ற ஒரு நிகழ்விற்குக் கூட அடாவடித்தனமாக எதிர்ப்புக் காட்டிய இனக்குரோதம் இடம்பெற்றதும் கல்முனையில்தான்.

கல்முனை தரவைக்கோயில் வீதியில் ஒரு காலத்தில் ஒரு சில தமிழ் குடும்பங்கள் இருந்தார்கள் என்பது உண்மை. ஆனால் இன்று 100 வீதம் முஸ்லிம்கள் வாழ்கின்ற அவ்வீதிக்கு புதிய பெயர் வைப்பதை பண்டைய வரலாற்றைக் கூறி எதிர்ப்பதும் இதே கல்முனையில்தான். அதே நேரம் தரவைக்கோயில் பிரதான வீதியின் எதிர்ப்பக்கத்தில் இருக்கின்றதேதவிர குறித்த பாதையில் இல்லை. என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 

மறுபுறத்தில் இலங்கையில் அரச வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டு இஸ்லாமிய சமய நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்ற இரண்டு பள்ளிவாயல்களுள் ஒன்றான “கடற்கரைப்பள்ளிவாசல்” குறித்த வீதியில்அமைந்திருக்கின்றது என்பது இங்கு கவனிக்கப்படவேண்டும்.

அதேநேரம் அன்று இந்திய அமைதி காக்கும் படை கல்முனையில் நிலை கொண்டபொழுது முஸ்லிம்களுக்கு ஆரம்பத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கவில்லை. அந்தசந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதே இனவாதிகள் முஸ்லிம்களைப்பற்றி இல்லாது பொல்லாததெல்லாம் கூறி முஸ்லிம்கள் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டத்தை இந்திய அமைதிப்படை மத்தியில் ஏற்படுத்தி இருந்தார்கள். அதன் காரணமாக அன்றைய தமிழ் இயக்கங்கள் முஸ்லிம்கள் மீது பலவிதமான இனவாதச் செயல்களை கட்டவிழ்ப்பதற்கு இந்தியப் படையினரும் துணைபோய்க்கொண்டிருந்தாகள். 

1989 பொதுத் தோதலில் மறைந்த தலைவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரின் ஏற்பாட்டினால் முஸ்லிம் பிரஜைகள் குழு உருவாக்கப்பட்டு இந்திய அமைதிப்படையினருடன் ஒரு சுமூக உறவை ஏற்படுத்துவதற்கான களம் அப்போது ஏற்படுத்தப்பட்டது. அப்பிரஜைகள் குழுவின் செயலாளராக நான் நியமிக்கப்பட்டிருந்தேன். அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் தொடர்பாக அமைதிப்படையினருக்கு மத்தியில் இந்த இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை பலத்த முயற்சிகளுக்கு மத்தியில் நாங்கள் மாற்றினோம் அல்-ஹம்துலில்லாஹ். அதன் பின்னரே இந்திய அமைதிப்படையினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு சுமுக உறவு ஏற்பட்டது.

முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமைப்பட வேண்டும். ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழ் தலைவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். ஆனால் நடை முறையில் முஸ்லிம்களுடன் ஒன்றுபட்டு வாழ்வதற்கு நாங்கள் ஒருபோதும் தயாரில்லை என்பதை தொடர்ச்சியாக காட்டி வருகின்றனர். 

அதன் வெளிப்பாடுதான் அன்று ஒரு நாள் அக்கரைப்பற்றில் இருந்து ஆலையடி வேம்பு பிரதேச சபை பிரிந்ததும், அதன் பின்னர் நிந்தவூரிலிருந்து 5000 இற்கும் குறைவான வாக்குகள் கொண்ட தமிழ் கிராமமான காரைதீவுக்கு தனியாக ஒரு பிரதேச சபையையும், ஒரு பிரதேச செயலகத்தையும் பெற்றுக் கொண்டதும், சனத் தொகையை கூட்டிக் காட்டுவதற்காக சுமார்2000 வாக்க்கள் கொண்ட மாளிகைக்காடு என்ற முஸ்லிம் கிராமத்தையும், சுமார் 1000 வாக்குகள் கொண்ட மாவடிப்பள்ளி என்ற முஸ்லிம் கிராமத்தையும் தன்னோடு இணைத்துக் கொண்டதும்,

அது போதாது என்று தமிழ் முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளமாக பார்க்கப்பட வேண்டிய கல்முனையை இரண்டாகப் பிரித்து தமிழர்களுக்கென உப பிரதேச செயலகத்தை ஏற்படுத்தி இருப்பதும் அப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு தமிழர்களும் முஸ்லிம்களும் நிரந்தரமாக கூறு போடப்பட வேண்டும் என்று இன்றுவரை போராடுவதுமாகும். இவற்றிற்கு காரணம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் எந்தவொரு ஆள்புல எல்லைக்குமான பொதுவான அரச நிருவாகத்தை அல்லது அரசியல் நிருவாகத்தை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவ்வாறான பிரதேசங்களில் அனைத்தும் தமக்கு தனியாக பிரித்துத் தரப்பட வேண்டும் என்று அவர்களது நிலைப்பாடாகும்.

எனவே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று ஒருபக்கம் கூறிக்கொண்டு, முஸ்லிம்களுடன் ஒருபோதும் ஒற்றுமையாக வாழ நாங்கள் தயாரில்லை என்கின்ற தமிழ் இனவாதம் நாங்கள் எல்லோரும் பேசுகின்ற சிங்கள பேரினவாதத்தை விட மிகவும் ஆபத்தானது; என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில்தான் சம்மாந்துறை சொறிக் கல்முனையில் தாக்கப்பட்ட பள்ளிவாசல் விடயத்தை உற்று நோக்க வேண்டும். பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட பாதிப்பு சிறியதா ? பெரியதா ? என்பது இங்கு முக்கியமில்லை. அதற்குப்பின்னால் செயற்பட்ட சக்திகள் எவை ? காரணம் என்ன ? என்பவைதான் முக்கியம். 

அம்பாரை மாவட்டம் இலங்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாவட்டமாகும். அதேநேரம் இப்பள்ளிவாசல் சம்மாந்துறை சொறிக் கல்முனையில் அமைந்திருக்கின்றது. இது தமிழர்கள் சற்று செறிவான கிராம்மாகும். அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து இருந்தார்கள். இந்நிலையில் இப்பளிளிவாசலை சிங்களப் பேரினவாதம் தாக்கியிருக்க முடியாது. ஏனெனில் அது அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசமல்ல. அவ்வாறாயின் இதைச் செய்தவர்கள் யார் ? காரணமென்ன ? இது இன்னுமொரு இனவாதமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை சிந்திப்பதற்கு நேரம் தேவையில்லை. 

அதேநேரம் காரைதீவிற்கு எதிரேயுள்ள சாய்ந்தமருது பள்ளிவாயலுக்கு சொந்தமான காணியில் அமையப் பெற்றிருக்கின்ற ஒரு “சியாரம்” இன்று அழிக்கப்பட்டிருக்கின்றது. பள்ளிவாசலுக்குச்சொந்தமான வயல் காணியை அண்டியதாக உள்ள இடத்தில் அது இருந்தும் அதனைப் பராமரிப்பதற்கு இதே இனவாதிகளால் அந்த பள்ளிவாசலுக்கு உரிமை மறுக்கப்படுகின்றது.

இதேபோன்றுதான் வடபுலத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக தடைக்கற்கள்போடப்படுகின்றன. அதேநேரம் குறிப்பாகமட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குச்சொந்தமான 10,000 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட அன்று புலிகளால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் இன்றும் மீளளிக்கப்படாமல் இருக்கின்றன. கடந்தகாலங்களில் அரசினால் அல்லது அரச படையினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளின் மீட்புக்காக தமிழ் தலைவர்கள் போராடுகின்றார்கள். அது நல்ல விடயம். நாமும் அதற்கு எமது ஆதரவைத்தெரிவிக்கின்றோம். 

ஆனால் அதே தமிழ் தலைமைகள் தமிழ் தரப்பினர் முஸ்லிம்களிடமிருந்து கையகப்படுத்திய காணிகளை விடுவிப்பதற்கு ஏன் முயற்சிக்கின்றார்களில்லை. மாறாக வடக்கிலிருந்து ஒரு கட்சியின் தலைவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கல்முனைக்கு வந்து கல்முனை நகரம் அபிவிருத்தி செய்யப்படக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றார். எனவே இங்கு தமிழ் பேரினவாதம் சரியான கோணத்தில் பார்க்கப்பட வேண்டிஇருக்கின்றது.

இந்நாட்டில் முஸ்லிம்கள் இரு தலைக் கொள்ளி எறும்புகளாக சிங்களப் பேரினவாதத்தினாலும், தமிழ் பேரினவாதத்தினாலும் நசுக்கப்படுவதை முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் சமூகமும் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும். இதில் சிங்கள பேரினவாதிகளின் தாக்கம் வட கிழக்கிற்கு வெளியேதான் பெரும்பாலும் அதன் வீரியத்தைகாட்டுகின்றது. காட்டவும் முடியும். அதேநேரம் வடகிழக்கு தமிழ் பேரினவாதம் முஸ்லிம்களை கவ்விப்பிடித்துக் கொண்டிருக்கின்றது என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது அரசியல் தலைமைகளும் சமூக ஆர்வலர்களும்சிங்களப் பேரினவாத்த்திற்காக உரத்துக் குரல்கொடுக்கின்றோம். அதேநேரம் வட கிழக்கில் நம்மை நசுக்குகின்ற இன்னும் ஒரு பேரினவாத்த்தையும் அதன் பரிமாணத்தையும் சரியாக அடையாளம் காணத்தவறிக் கொண்டிருக்கின்றோம். இந்தப்பின்னணியில்தான் எதிர்கால அரசியல் தீர்வுகளும் பார்க்கப்பட வேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றது. இதனை நமது அரசியல்தலைமைகளும் சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும். 

ஒற்றுமை என்ற வெற்றுச் சொல்லைப் பயன்படுத்தி நம்மை நாமே இழந்துவிடக் கூடாது. இதயத்தின் அடித்தளத்திலிருந்து வருகின்ற ஒற்றுமை என்பது வேறு, நுணி நாக்கிலிருந்து பிறக்கின்ற ஒற்றுமை என்கின்ற வெற்று வார்த்தை வேறு, எனவே அரசியல்தீர்வு ஒன்று காண இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் அவசரமாக விழித்துக் கொள்ளவேண்டும். அதேநேரம் மறைந்த தலைவர் கனவு கண்ட கல்முனையின் நீண்டகாலத் தேவையான புதிய நகரத்திட்டத்திற்கு எத்தடைகள் வரினும் அத்தடைகளைதகர்த்தெறிந்து அதனை செயலுருவம் கொடுப்பதற்கு கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒன்றிணையவேண்டும். 

ஒற்றுமைப்பட்ட ஒரு சமூதாயத்தின் பயணத்தை உடைத்தெறியும் சக்தி இந்த இனவாதிகளுக்கு இல்லை. என்பதை புரியவைக்கவேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர் எவ்வாறு சிங்கள பேரினவாதம் என்பது மொத்த சிங்கள மக்களையும் குறிக்கவில்லையோ அதேபோல் தமிழ் பேரினவாதம் என்பது முழு தமிழ் சமூகத்தையும் குறிக்கவில்லை. எனபதை நாம் இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும். அதேநேரம் இனவாதிகள் சிறிய தொகையினராக இருந்தாலும் அவர்களது செயற்பாடுகள் மொத்த சமூகத்தையும் பாதிக்கும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -