ஹாசிப் யாஸீன்-
மெஸ்ரோ நிறுவனமும், கல்முனை வலயக்கல்விப் பணிமனையும் இணைந்து நடாத்தும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் 'புலமைப் பூக்கள் - 2015' நிகழ்வு டிசம்பர் 03ம் திகதி பி.ப 2.00 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சாய்ந்தமருது அஸ்லம் பிக்மார்ட்டின் அனுசரணையில் மெஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.நசீல் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் ரொபின், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ.கலையரசன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், சாய்ந்தமருது அஸ்லம் பிக்மார்ட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ.எம்.றியாஜ் உள்ளிட்டோர் கௌரவ அதிதியாகவும் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், மெஸ்ரோ நிறுவனத்தின் உயர்பீட மற்றும் பிரதேச உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை, மாளிகைக்காடு உள்ளிட்ட பிரதேச பாடசாலைகளில் சித்திபெற்ற 214 மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளளனர்.
மேலும் மாவட்டத்தில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்கள் மற்றும்
பெறுபேற்றில் சிறந்த மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலைகள் என்பவற்றிக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
