ஏ.எம் .றிகாஸ்-
தமிழ் முஸ்லிம் மக்களிடையே கடந்த காலங்களில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை மறந்து மொழியால் ஒன்றுபட்ட இரு சமூகங்களும் இணைந்து செயற்பட்டால் இந்த நாட்டிலே சிங்கள மக்களுக்கு இணையாக உரிமைகள் நீதி நியாயங்களை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் (அமல்) தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஏறாவூர் எக்ஸ்பிரஸ் கல்லூரியினால் ஏறாவூர் அல் - அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்நது உரையாற்றுகையில்
'யுத்தம் முடிவடைந்த பின்னர் சிறுபாண்மையினரான முஸ்லிம்களும் தமிழர்களும் அரசியல் போராட்டத்தின் மூலம் எமது உரிமைகளை வென்றெடுக்க கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். சாத்வீகப் போராட்டத்திலிருந்து ஆயுதப் போராட்டம் வரை தமிழ் மக்களோடு முஸ்லிம் மக்கள் கைகோர்த்துச் செயற்பட்டதை யாரும் மறக்க முடியாது.
கடந்த கால வரலாற்றில் சில கசப்பான அனுபவங்களும் சில பிரிவுகளும் இடம்பெற்றது உண்மை. அவற்றை நாம் மறந்து மொழியால் ஒன்றுபட்டிருக்கின்ற தமிழ் முஸ்லிம் என்ற உறவு நீடிக்க வேண்டும். இஸ்லாம் கூறுவது போல் மன்னப்போம் மறப்பபோம்.
கடந்த காலங்களில் தமிழ் முஸ்லிம்களுக்குள் இருந்த கசப்பான நிகழ்வுகளை மறந்து இரண்டு இனங்களும் ஒருதாய் பெற்ற பிள்ளைகள் போல் தொடரந்து செயற்பட வேண்டும். எல்லாவற்றிலும் அன்னினயுன்னிமான உறவைக்கொண்ட இரண்டு இனங்களும் இணைந்து செயற்பட்டால் இந்த நாட்டிலே சிங்கள மக்கள் உரிமைகள் நீதி நியாயங்களை நாங்களும் அவர்களுக்கு இணையாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழ் முஸ்லிம் உறவுக்கு எடுத்துக்காட்டாக கிழக்கு மகாணத்திலே தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஜூம் இணைந்து ஆட்சியமைத்துள்ளார்கள். இந்த நல்லுறவு பிரிவினைவாத சக்திகளால் முடக்கப்பட்டுவிடக் கூடாது.
இன்று நாட்டில் சிறுபாண்மை இனங்களின் பங்களிப்புடன் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த அரசு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தாலும் சிறுபாண்மை மக்களுக்கான சிறந்த தீர்வுத் திட்டத்தை முன்வைக்கத் தவறிய காரணத்தினால் சிறுபாண்மை மக்களின் வாக்குப் பலத்தினால் தோல்வியடைந்தது. இந்நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி சிறுபாண்மை மக்களைப் பாதிக்காத வகையில் நீதிiயும் நியாயத்தையும் சமத்துவத்தையும் வழங்க வேண்டும்'
என்றார்.
