க.கிஷாந்தன்-
எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி பூரணைத்தினத்துடன் ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலத்தை முன்னிட்டு, சிவனொளிபாதலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று 13.11.2015 அன்று வெள்ளிக்கிழமை நல்லதண்ணியில் அமைந்துள்ள கிராம சேவகர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இவ்வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலத்தை ஆரம்பிக்கும் முகமாக இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரத பவனியாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி காலை சுபவேளையில புறப்பட்டு பெல்மதுளை, இரத்தினபுரி, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, அட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாதமலையின் அடிவாரத்தினை அன்றையதினம் இரவு வந்தடையுமென்பதுடன், சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்ததன் பின்பு 24ஆம் திகதி அதிகாலை நடைபெறவுள்ள விசேட பூஜைகளைத் தொடர்ந்து 2015, 2016ம் வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இக்கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.
இந்த இரதபவனியை வரவேற்பதற்காக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சிவனொளிபாதமலைப்பிரதேசத்தில் பொலித்தீன் பாவனை, மதுபாவனை என்பன இம்முறையும் தடைசெய்யப்பட்டுள்ளதெனவும் அறிவிக்கப்பட்டது.
மேலும், சிவனொளிபாத மலைக்கு வருகைதரவுள்ள யாத்திரிகர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்குவதற்கு அட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த யாத்திரிகர்களுக்காக ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து விசேட போக்குவரத்துச்சேவைகளை நல்லத்தண்ணி நகர் வரை நடத்துவதற்கு அட்டன் பஸ் டிப்போ நடவடிக்கை எடுக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் சிவனொளிபாதலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன, நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முல்ல, கினிகத்தேனை பிரதேச செயலாளர் ஹேரத், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



