மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய விக்கிரகங்கள் சிலவற்றை வெள்ளிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் நவக்கிரக விக்கரங்களை உடைத்ததுடன், சில விக்கிரகங்கள் வீதிகளில், ஆலய கிணற்றில் போட்டு விட்டு சென்றுள்ளனர்.
ஆலயத்தின் நவக்கிரகத்திலுள்ள விக்கிரகங்கள், ஆஞ்சநேயர், நந்தி, பலிபிடம் அடங்களாக 13 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல் அதிகாலை ஆலயத்திற்கு சென்ற ஆலய பரிபாலன சபைச் செயலாளர் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு கீழே கிடைப்பதை கண்டுள்ளார்.
இதனை கண்டறிந்து கொண்ட நிருவாக சபையினர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் தெரியப்படுத்தியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சா.வியாளேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் சனிக்கிழமை விஜயம் செய்து நிலைமையை நேரில் கண்டு விசாரித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸாரர் மேற்கொண்டுள்ளதுடன், மோப்ப நாய்களை வைத்து விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.







