மூன்று பேர் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாலித தெவரப்பெரும, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் ஜே.வி.பி.யின் பிமல் ரட்நாயக்க ஆகியோர் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளனர்.
பாலித தெவரப்பெரும தனது மகனின் மரணம் காரணமாக, ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் பதுளை மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சாமர சம்பத், ஊவா மாகாண முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் செனவிரட்ன நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.
சாமர சம்பத் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத்சந்திர மாயாதுன்னே அன்றைய தினமே பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அந்த வெற்றிடத்திற்காக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பிமல் ரட்நாயக்க நியமிக்கப்பட உள்ளார்.
பிமல் ரட்நாயக்க மற்றும் லக்ஷ்மன் செனவிரட்ன ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு போதியளவு விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது தோல்வியைத் தழுவியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் சார்பாக பாராளுமன்றத்திற்கு சென்ற அமைச்சர் ஹக்கீமின் சகோதரர் டாக்டர் ஹாபீஸ் இன்று தனது பதவியை இராஜினாமா செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது
