க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து கஞ்சா கலக்கப்பட்ட மதனமோதக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் 17.09.2015 அன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 370 மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த பல மாதங்களாக குறித்த சந்தேக நபர்கள் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் வில்லைகளை விற்பனை செய்துவந்துள்ளார்கள் என்பது ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாத்திரை கொள்வனவிற்காக ஒருவரை அனுப்பி அவரூடாக சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கினிகத்தேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதோடு, கினிகத்தேன பிரதேசத்தில் பல பாகங்களுக்கு இவர்கள் இந்த போதைப்பொருள் வில்லைகளை விநியோகித்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை 18.09.2015 அன்று வெள்ளிக்கிழமை அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கினிகத்தேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




