பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றத்தை காட்டும் அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த மரணம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல், 20 ஆம் திகதி வரையான உயிரிழந்த றகர் விளையாட்டு வீரரின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட போதிலும், இதுவரை அந்த அறிக்கையை கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் ஆஜரான அதிகாரி தெரிவித்தார்.
நீதிமன்றம் கோரியுள்ள தொலைபேசி உரையாடல் விபரங்களை தொலைபேசி நிறுவனம் மூன்று மாதங்கள் வரை மாத்திரமே சேமித்து வைத்திருக்கும் என நிறுவனத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறியுள்ளார்.
இதனால், குறித்த தகவல்களை செயற்பாட்டு ரீதியாக வழங்குவதில் சிரமங்கள் இருந்தாலும் தொலைபேசி நிறுவனம் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் நடத்தும் விசாரணைகளுக்கு தேவையான சகல விபரங்களையும் வழங்கி விசாணைகளுக்கு உதவுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
அதேவேளை மரணடைந்த றகர் விளையாட்டு வீரரின் மரணத்திற்கு பின்னரான பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை அழைத்து நாளைய தினம் வாக்குமூலம் ஒன்றை பெற தீர்மானித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.
