அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை அமைத்துக் கொடுக்கும் கனவு இன்னும் கலைந்து விட வில்லை என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார். எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பில் அவரிடம் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தனியான உள்ளூராட்சி மன்றமொன்றை அமைத்துக்கொள்ளும் சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கைகள், அபிலாஷைகள் ஒருபோதும் வீண்போகாது எனவும் தமக்கான அரசியல் அதிகாரம் கிடைத்ததும் அது நிச்சயம் நிறைவேறும். மற்றுமொரு சமூகத்தையும் பிரதேசத்தையும் பாதிக்காத வகையில் தங்களை தாங்களே ஆள நினைப்பதில் எந்தவிதமான தவறும் கிடையாது.
சனத்தொகை மாற்றத்திற்கு ஏற்றவாறு வளங்களை பிரித்துக்கொடுத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு புதிய சபைகளை உருவாக்குவது காலத்தின் தேவையாகும். அந்த வகையில் கடந்த ஆட்சிக்காலத்தின் இறுதி நேரத்தில் சாய்ந்த மருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்துக்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு ஒப்பமிட்டிருந்த வேளை அதனை தடுப்பதற்கு மு.கா தலைமை கடுமையான பிரயத்தனங்களை முன்னெடுத்தமை யாவரும் அறிந்த விடயமாகும். எனவேதான் சிலர் ஆளுவதற்காகவும் அரசியல் பிழைப்பு நடத்துவதற்காகவும் சமூகத்தினது அல்லது ஒரு பிரதேசத்தினது உணர்வுகளிலும் அபிலாஷைகளிலும் கொடூரமாக நடந்து கொண்டு வருகின்றனர். ஒரு சமூகத்தின் பெயரை முன்னிறுத்திக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது சுயநலனுக்காக இன்று ஐ.தே.கட்சியின் ஒரு தொகுதியின் அமைப்பாளராக ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள நிலைமைக்கு மாறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையிலும் இருந்து தனது சமூகத்திற்கான எந்த பணிகளையும் செய்யாத இவர் தற்போது இருக்கின்ற புதிய அமைச்சரவையிலும் எந்தவிதமான நன்மதிப்பையும் பெற்றிருக்கவில்லை. ஆனால் எங்களுக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தை கொண்டு அரசாங்கத்தின் உச்ச கட்ட பயன்களை சமூகத்திற்கு வழங்கியுள்ளோம். எமக்கு கிடைத்த எல்லா அமைச்சுக்களையும் மிகவும் லாவகமாக கசக்கி பிழிந்து அத்தனை நன்மைகளையும் வழங்கியிருந்தோம்.
அமைச்சரவையில் நம்மீது அரசாங்கத்திற்கும் அரசாங்கத்தின் மீது நமக்கும் நம்பிக்கையும் கூட்டுப்பொறுப்பும் இருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இவ்வாறு இருந்ததில்லை.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபினால் என்ன தேவைக்காக அந்த இயக்கம் அமைக்கப்பட்டதோ அவைகள் அனைத்திலிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் வழிதவறிச் செல்கின்றது.
ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சி எனும் வாகனத்தின் சாரதியாக இருக்கும் வரையில் தான் அந்த வாகனத்தில் ஏற மாட்டேன் என்று அன்று மர்ஹூம் அஷ்ரப் கூறியிருந்தார். ஆனால் ரணிலின் கைப்பொம்மையாக முஸ்லிம் காங்கிரஸ் மாறியுள்ளது.
இன்று புதிய ஜனாதிபதியை புகழ்ந்து வாழ்த்தும் ரவூப் ஹக்கீம் மிக விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அறிக்கைகளையும் அபாண்டங்களையும் விட்டு செயற்படுவார். இதனை மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.