ரகர் விளையாட்டு வீரர் தாஜுதீன் வாகன விபத்தில் உயிரிழக்க வில்லையென குற்றவியல் விசாரணைகள் திணைக்களம் நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான் நிஷாந்த பீரில் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே திணைக்களம் இந்த விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
வசீம் தாஜுதீனின் பல், முதுகெலும்பு மற்றும் கால் பாதம் என்பன பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் மீது ஆயுதமொன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் சாட்சிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வெள்ளவத்தை முருகன் பாதையில் குடியிருந்த வசீம் தாஜுதீனின் சடலம் கடந்த 2012 மே மாதம் 16 ஆம் திகதி நாரஹேன்பிட்ட சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து கண்டெடுக்கப்பட்டது.
தீப்பிடித்துள்ள மோட்டார் காரின் உள்ளே இருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு நாளையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.
